இன்போசிஸ் நாராயண மூர்த்தி என்று பரவலாக அறியப்படும் என்.ஆர்.நாராயண மூர்த்தி, உலக அரங்கில் அறிமுகம் தேவைப்படாத மனிதர். மென்பொருள் உலகில் பெரிதாக வளரத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், தொழில் முனைவோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர் இவர் தான். இந்தியாவில் மென்பொருள் வளர்ச்சியின் கதையே இவரது கதையாகும். பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் இவர், இந்தியாவின் மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இன்போசிஸ் (Infosys) நிறுவனத்தின் நிறுவனர்.

என். ஆர். நாராயண மூர்த்தி என்று அனைவராலும் அறியப்படும் “நாகவாரா ராமாராவ் நாராயண மூர்த்தி” அவர்கள், 1946-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரில் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை வெற்றிகரமாக முடித்த அவர், பிறகு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங், யுனிவர்சிட்டி ஆஃப் மைசூரில் 1967-ஆம் ஆண்டு, மின் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், 1969-ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள ஐஐடி-யில் (IIT, Kanpur) இருந்து மின்னணு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
நாராயண மூர்த்தி தனது வாழ்க்கையை ஐஐஎம் அஹமதாபாத்தில், கணிணிப் பொறியாளராகத் துவக்கினார். நேரமுறையில் ஒரு கணினியைப் பகிர்ந்து கொண்டு, ஒரு மொழி பெயர்க்கும் மென்பொருளை வடிவமைத்தார்.
பின்பு, புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இணைந்தார். பின்பு 1981-ல் தனது மனைவி சுதாவிடம் 10,000 ருபாய் கடனாகப் பெற்று, 6 நண்பர்களோடு இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தைத் துவக்கினார்.

அடுத்த ஆண்டே, பெங்களூரில் தன் அலுவலகத்தினைத் தொடங்கிய இன்போசிஸ் நிறுவனம், விரைவில் அதைத் தன் தலைமை அலுவலகமாகவும் மாற்றியது. குறுகிய காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டிய இந்நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ச்சியடைந்தது. மிக விரைவில் , “அறிவுசார் தொழில்முனைவோர்” எனப் போற்றப்பட்ட இந்நிறுவனத்தை, 2001-ல் “பிசினஸ் டுடே” என்ற பத்திரிக்கை இந்தியாவின் சிறந்த பணி வழங்குனராகக் குறிப்பிட்டது.
இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சுமார் 22 நாடுகளில் அலுவலங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இந்தியா, சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்ச்சி மையங்களாகவும் திகழ்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் ஆரம்பகட்டத்தில், சங்கடமான சூழல்களில் அனைவரது மனதில் இருந்த நம்பிக்கை மற்றும் நேர்மையான சிந்தனைகள் தான் இன்று அந்நிறுவனம் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடையக் காரணியாக உள்ளது என்கிறார் நாராயண மூர்த்தி. சில நேரங்களில் மற்ற பெரிய நிறுவனங்கள் மிகப்பெரிய தொகைக்கு இன்போசிஸ்சை வாங்கிக் கொள்ள முன் வந்த போதும், நிறுவனத்தின் மீதும், எங்களது திறமைகள் மீதும் நம்பிக்கை வைத்து உழைத்ததன் பலனை இன்று நாங்கள் காண்கிறோம்” என்கிறார் அவர்.
என். ஆர். நாராயண மூர்த்தி அவர்கள், நேர்மை, எளிமை, உண்மை என வாழ்ந்து காட்டியவர். தனது நிறுவனத்தைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், ஒட்டுமொத்த தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியைப் பற்றியும் சிந்தித்தவர். இந்தியாவை தகவல் தொழில் நுட்பத் துறையின் முக்கிய சக்தியாக மாற்றியவர்களில் என். ஆர். நாராயண மூர்த்தி அவர்களின் பங்கு சிறப்பானது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் என்.ஆர் நாராயண மூர்த்தி அவர்களை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.