இந்திய அரசியல் வரலாற்றில் எத்தனையோ பேர் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் சிலரது பெயர் மட்டுமே நம் நெஞ்சில் நீங்காமல் நிலைத்து நிற்கும். அப்படி ஒருவர்தான் இந்தியாவின் விடிவெள்ளி, ஏவுகணை நாயகன், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இந்தியாவின் தென்கோடி கிராமத்தில் பிறந்து உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன் வாழ்க்கையில் வாகை சூடியவர். அயராத உழைப்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஒருவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் என்பதற்கு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு ஒன்றே சான்று.

விதை
தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் 1931 – ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்தார் அப்துல் கலாம். இவருடைய இயற்பெயர் ஆவுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம். நடுத்தரக் குடும்பம். சிறு வயதில் விண்மீன்களைத் தொட எத்தனித்த அந்தப் பிஞ்சு விரல்கள் பிற்காலத்தில் வான் அளக்கும் ஊர்திகளைப் படைக்கும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். வறுமை துரத்த, செய்தித்தாள் விற்பதற்குப் புறப்படுகிறார். வாழ்க்கை அப்படியே போகாது, நிச்சயம் ஒரு நாள் இந்த வானம் வசப்படும் என்று அவர் எண்ணியிருந்தார். திருச்சியில் இளங்கலை இயற்பியல் படிப்பை முடித்தார். விண்வெளித்துறையில் அவருக்கு இருந்த ஆசையினால் சென்னையில் உள்ள MIT கல்லூரியில் விண்வெளி பொறியியல் படிப்பை விரும்பிப் படித்தார்.
இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவான DRDO (The Defence Research and Development Organisation ) – வில் விஞ்ஞானியாக சேர்ந்தார். அவர் பணியிலிருந்தபோது இந்திய ராணுவத்திற்காகச் சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO – வில் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர் SLV செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி – I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். கலாம் யார்? என்பது இந்தியர்களுக்குத் தெரியவந்த தருணம் அதுதான். தொடர் முயற்சிகள், பல தோல்விகள், இமாலய வெற்றிகள் என வாழ்க்கை தொடர்ந்தது. 1999 – ஆம் ஆண்டு உலகத்திற்கு இந்தியாவின் வலிமையை நிரூபிக்க நினைத்தார். பாலைவன மணலில் பொக்ரான் வெடித்துச் சிதறியது.

மக்களின் ஜனாதிபதி
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். பதவிக்காலம் முழுவதும் ஏராளமான மாணவர்களைச் சந்தித்து எதிர்கால இந்தியாவிற்கான தேவைகளைப் பற்றி விளக்கினார். இந்திய அரசியல் வரலாற்றில் எதிர்ப்புகள் இல்லாத அரசியல் தலைவர் சந்தேகமே இல்லாமல் கலாம் மட்டுமே. 2007 – ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு அவர் ஒரு ஆதர்சம். இந்தியாவை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தத் தன் வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த அப்துல் கலாம் அவர்களை வணங்குவோம். இந்தியாவின் கனவு நாயகன் அப்துல் கலாம் அவர்களை, அவரது பிறந்தநாளான இன்று, இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.