கண்ணை மூடியவுடன் உறக்கம் வருவதென்பது ஒரு வரம். உறங்கியபின் நாம் விரும்பும் வண்ணம் கனவுகள் வந்தால் ரெண்டாவது லட்டு தின்பது போல. ஆனால் ஒரே கனவு அவ்வப்போது வருவதென்பது என்பது, உங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் குறிப்பிட்ட பிரச்சினையை நீங்கள் மறந்துவிட்டதையோ அல்லது அப்பிரச்சினையை பற்றி நீங்கள் முற்றிலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லையென்பதையோ குறிக்கும். சரி, ஒரே கனவு உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கு வந்ததென்றால் என்ன அர்த்தம்? அதுவும், ஒரே ஆள், பலர் கனவினில் அடிக்கடி வருவது என்றால் ..
தலைவர் தான் திஸ் மேன்
This Man
2006 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவர் (பெண்) தன்னுடைய மருத்துவமனை அறையில், தனது கனவில் அவ்வப்போது வரும் ஒரு நபரின் படத்தை வரைந்து வைத்திருந்தார். அவ்வப்போது வரும் அந்த நபர் தினந்தோறும் ஒவ்வொருப் பெயரைச் சொல்லி தன்னை அறிமுகம் செய்துகொண்டு அந்த மருத்துவருடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வும் கூறியுள்ளார். ஆனால் மனநலமருத்துவரோ, கனவில் கண்ட அந்த நபரை நிஜத்தில் எங்கேயும் பார்த்ததே இல்லை என்கிறார்.
ஒரு நாள் தன்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்த நோயாளியிடம் இது பற்றிக் கூற, நோயாளியோ தானும் இவரைக் கனவில் கண்டதாகக் கூறியுள்ளார். அதிர்ந்து போன அந்த மனோதத்துவ நிபுணர் உடனடியாக தன் சகாக்கள் மற்றும் மூத்த மருத்துவர்களிடம் தகவல் தெரிவிக்க, நான்கைந்து மாதத்தில் அதே மனிதரை நான்கு பேர் கனவில் கண்டதாக கைதூக்கினர். அவர்கள் அனைவரும் வைத்த பொதுவான பெயர்தான் “This man” .

இந்த விஷயம் வேகமாய் பரவ ஒரு கட்டத்தில் உலகெங்கிலும் 2000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் இவரை தங்கள் கனவில் கண்டதாகக் கூறி தங்களுடைய கனவுகளை பகிர்ந்துகொண்டனர். அமெரிக்காவில் உருப்பெற்று அரபு நாடுகள் வழியாக ஆசியா வரைப் பரவிவிட்டார் இந்த மேன். இந்தியாவில் டெல்லியிலும், சென்னையிலும் இவருக்கு சொந்தங்கள் உண்டு. கதைகள் கட்டுக்கதைகளாகப் பரவ அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்ய எத்தனித்தனர். எப்படி ஒரே ஆள் , அடிக்கடி பலருடைய கனவில் வரக்கூடும்? இதுதான் கேள்வி. தடயம் என்னவென்றால் கனவு கண்ட அத்தனைபேரும் ஜாதி, மத , கலாச்சார தொடர்பற்றவர்கள். உலகில் நான்கே நான்கு விசயங்கள் தான் இப்படி கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியவை. அவைகள் காற்று, ஏவுகணை, வதந்தி, நோய். இதில் இந்த மேன் மூன்றாவது ரகம் என்பது நார்த்திகவாதிகள் கருத்து.
நம்முடைய எண்ணம் மற்றும் ஆசைகளின் பிம்பங்களே நாம் காணும் கனவுகள் என்கிறது பொதுவான அறிவியல். இது இளைஞர்களின் கனவிற்குப் பொருந்தும். ஆனால், குழந்தைகள் உறக்கத்தில் சிரிப்பதற்க்கும், பெரியவர்கள் கனவில் இறந்தோர்கள் வருவதற்கும் என்ன அர்த்தம்? அதற்கான நம் சான்றோர்கள் விளக்கத்தை அறிவியல் நம்புவதாக இல்லை. அப்படியிருக்க, “இந்த மனிதனைக்” கனவில் காணும் எந்த மனிதனும் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு தியரியில் அடங்கிவிடுவர்
ARCHETYPE THEORY
அன்றாட வாழ்வில் நாம் காணும் அனைத்து விவரங்களும் நம்மை அறியாமல் நம் மூளையில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பின்னர் நம் உணராத வேளையில் திடீரென்று வெளிப்படும். (எ.கா: நம் நினைத்த பாடல் திடீரென்று எங்காவது ஒளிபரப்பாவது. ஆனால் அந்த பாடல் நம் காதுகளில் முன்னரே விழுந்திருக்கும் நாம் கவனித்திராத போது.)
RELIGIOUS THEORY
ஆன்மீக வாதிகளால் இந்த முகம் கடவுளுடையது என்று குறிப்பிடப்படுகிறது. அவரால்தான் இவ்வாறு பலதரப்பட்ட மக்களின் கனவுகளுக்குள் ஒரே நேரத்தில் புக முடியும் என்பது அவர்கள் கருத்து.
DREAM SURFER THEORY
இந்த தியரியை நம்புகிறவர்கள் இல்லுமினாட்டி ரகம். அதாவது , உண்மையில் பிறருடைய கனவில் புகும் சக்தி உள்ள ஒருவன்…. போதும் என்கிறீர்களா!!
DREAM IMITATION THEORY
இதன் படி , ஒரு பொருளைப் பார்த்து பார்த்து, அதனை வியந்து மனத்தில் ஆழப்பதித்து இரவில் கனவை வரவழைத்துக் கொள்வது. இப்படித்தான் இந்த முகம் பலர் கனவில் குடியேறியிருக்க கூடும் என்பது அறிவியலாளர்கள் கருத்து. சிறுவர், சிறுமியருடைய கனவுகள் போல.
தேடுதல் வேட்டை
கேட்பதற்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் புகுந்த அதிசயப் பாம்பு போல இருந்தாலும் , இந்த மனிதரைத் தேட ஆயிரக்கணக்கான நோட்டீசுக்கள் பல மொழிகளில், பல நாடுகளில் ஒட்டப்பட்டன. இன்று வரை நாள்தோறும் 2000 பேர் வரை இந்த மனிதரை கனவில் காண்பதாக வலைத்தளத்தில் பதிவுகள் காட்டுகின்றன. அவரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் பலத்த சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. “This Man.org “ என்ற இணையதளத்தில் இவருடைய பல முகங்கள் கொண்டு இவரைத் தேடிவருகின்றனர். சிறுநரிதான் சிக்கும் ..சிறுத்தை சிக்குமா?.. நார்த்திகவாதிகள் சும்மா இருப்பார்களா.. “ ஓஓஓ…இவரை எனக்கு நல்லாத் தெரியும் என்றும் வாருங்கள் அவரிடமே அழைத்துச் செல்கிறேன் எனக்கூறி எகிப்தின் தற்போதைய அதிபர் அப்துல் பக்தா அல்-சிசியைக் கைகாட்டியவர்களும் உண்டு. இவரைப் போலவே பிரபல இசையமைப்பாளர் ANDREW LLOYD WEBBERMAN என்பவரையும் காட்டிக்குடுத்தனர். மேலும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. இவர் ஒபாமா என்றும், மொட்டையடித்த சூப்பர் மேரியோ என்றும் கிண்டல் செய்து ஆன்மீக வாதிகளின் சாபத்திற்கு ஆளாகினர். அல்டிமேட்டாக இந்த திஸ்மேன் நான்தான் என்று தமிழகத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவரும் களத்தில் இறங்கி ஆடி வருகிறார். எல்லாம் வெளிநாட்டு நிதி திரட்ட சதி செய்யும் “தேட் மேன்” கள் ரகம்.
யாருடைய முகம் இது?
பொதுவாக ஒருவர் கண்ணின் ரேகையை வைத்தே அவர் எந்த இனத்தை அல்லது நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அறியமுடியும். இந்த மனிதனின் முகமானது வரையப்பட்டிருப்பதால் கண்கள் இனம் மற்றும் நாட்டைக் கணிப்பது சாத்தியமில்லை. முகத்தின் மேல்பாதியை மறைத்தால் இளைஞர் போலவும் , கீழ்ப்பாதியை மறைத்தால் முதியவர் போலவும் காணப்படுகிறது. உதடுகளோ முழுவதும் தடிமனாகவும் இல்லாமல் மெல்லியதாகவும் இல்லாமல் உள்ளது. முகமோ வட்டமாகவும் இல்லாமல் செவ்வகமாகவும் முழுமையடையாமல் உள்ளது. சிறிய உருண்டைகளாக மூக்கு என உலகம் முழுவதும் வாழும் மக்களின் கலப்பாக இப்படம் இருப்பதால் சரிவிகித சந்தேகத்தையும், நம்பிக்கையையும் இந்த மனிதர் ஏற்படுத்துகிறார்.
வதந்தியா?
இந்த மனிதனைப் பற்றி சிலர் ஆராய முற்பட்டபோது இத்தாலியைச் சேர்ந்த மார்கெட்டிங் நிருபர் Andrea Natella செய்த சித்து வேலை எனத் தெரிகிறது. Thisman.org யின் நிறுவனரும் இவரே என தகவல் வெளிப்படுகிறது. வித்தியாசமான விளம்பரம் செய்து ஆபாச இணையதளங்களுக்கு இட்டுச் செல்வது அல்லது கலைப்பொருட்களை விற்பனை செய்யும் தளத்திற்கு அனுப்பி விடுவது இவர் வேலையாக இருந்துவந்துள்ளது. இந்த இல்லுமினாட்டி வேலையை பலர் நம்ப மறுக்க காரணமென்னவெனில், புத்திசாலி வாசகர்களே கவனியுங்கள், அந்த “மனோதத்துவ மருத்துவரின் “ பெயரோ அடையாளமோ இதுவரை வெளியிடப்படவேயில்லை. ஆக நுட்பமான அறிவியல் முறைகளில் மனிதர்களை ஏமாற்றும் திஸ் மேன் நிச்சயம் முட்டாள் இல்லை. தன்னை முன்னிறுத்த, தங்களுடைய வீரதீர பராக்கிரமங்களை வெளிப்படுத்த நினைக்கும் ஓர் ஆசாமி தான் திஸ்மேனின் முகத்திற்குப் பின்னால் இருக்கிறார். அவருடய காதைப்பிடித்து நிஜ உலகிற்கு மக்கள் இழுத்துவரும் காலம் வெகுதொலைவில் இல்லை.