உலகின் மிக உயரமான சிகரம். இயற்கையின் அதி உன்னத அழகின் இருப்பிடம். இதனைக்கான உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் நேபாளத்திற்கு பயணிக்கின்றனர். கடும் பனி, நிமிடத்தில் மாறும் சீதோஷ்ணம், பனிச்சரிவு, பனிப்புயல் என எவரெஸ்ட் உங்களுக்கு அளிக்கும் சோதனைகள் மிகவும் சவாலானவை. சாகச பயணத்தை விரும்பும் மனிதர்களின் சொர்க்க புரியாகத் திகழும் எவரெஸ்டின் மற்றொரு பகுதி அனைவரையுமே கதிகலங்கச் செய்கிறது.

சாகசம்
எவரெஸ்ட் பயணம் என்பது உடனடியாக பங்குபெறும் நிகழ்வு அல்ல. அதற்கென நான்கு மாதங்கள் கடும் பயிற்சி எடுக்கவேண்டும். பயணத்தின்போது நீங்கள் கொண்டுசெல்லும் பொருட்களை நீங்கள் பயன்படுத்தும் விதத்தில் தான் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. சில நேரங்களில் அதுவே வாழ்வா சாவா போட்டியாகிவிடுகிறது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சுற்றிச் சுழலும் பனிப்புயலில் நீங்கள் சிக்கிக்கொண்டால் நிலைமை மோசமாகிவிடும். உங்களுடைய குழு உங்களைத் தேடி கண்டுபிடிக்கும் வரை உயிர்பிழைத்திருக்கத் தேவையான அனைத்து பயிற்சிகளும் கொடுக்கப்பட்டாலும், நிஜ உலகம் பயிற்சியை விட கடினமாக இருக்கும்.

உடல் வெப்பநிலை குறைந்து உறுப்புகள் செயலிழந்து போதல், சுவாசக்கோளாறு போன்றவை மிக ஆபத்தான கட்டங்களுக்கு பயணியை அழைத்துச்செல்லும். இதன் காரணமாகவே மலையேறிகள் குழுவினராக பயணம் மேற்கொள்கிறார்கள். குழுவிலிருந்து ஒருவர் பிரிவது கிட்டத்தட்ட மரணத்திற்கு சமம். ஏனெனில் பனி எந்நேரமும் தனது கோர முகத்தை காட்டலாம். சிறு பனிச்சரிவு போதுமானது. பிரிந்தவருடைய உடல் எக்காலத்திற்கும் கிடைக்காமல் எவரெஸ்டின் ஏதோ ஓர் இடத்தில் பனிப்பாறைகளுக்கு இடையே நிரந்தரமாக தங்கிவிடும்.
அதிகரிக்கும் மரணங்கள்
எவரெஸ்ட் பயணம் துவங்கிய 1922 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 200 பேர் இங்கே உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் அவற்றில் வேகுசிலரின் உடம்புகளை மட்டுமே மீட்க முடிந்திருக்கிறது. காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் ஆகியவற்றின் காரணமாக இந்த விபத்துகள் ஏற்படுவதாக நேபாள அரசு தெரிவிக்கிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு எவரெஸ்ட் பயணக்குழு ஒன்று மனித உடலைக் கண்டுபிடித்து கீழே எடுத்துவந்திருக்கிரார்கள். அதனை ஆய்வு செய்ததில் 1970 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணித்த பிரிட்டன் குழுவினைச் சேர்ந்த ஒருவருடைய உடல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சவால்
மலையேறி ஒவ்வொருவருக்கும் தேவையான உணவு, டென்ட், பாதுகாப்பு கருவிகள், வரைபடம், ஆக்சிஜன் சிலிண்டர் என அனைத்துப் பொருட்களையும் அவர்களே சுமந்து செல்லவேண்டும். அதன் எடையே பயணியை சோர்வடையச் செய்துவிடும். இந்நிலையில் மனித சடலங்கள் தென்பட்டால் அதனை கைப்பற்றி கீழிறக்குவது மிக மிக கடினமான வேலை.

பாதுகாப்பு அதிகாரிகள், உதவி செய்யும் குழு ஆகியவை இருந்தாலும் விபத்துகளை தவிக்க முடிவதில்லை. நேபாள அரசாங்கம் இதற்கென சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் எனும் குரல் வெகுகாலமாகவே கேட்கப்பட்டு வருகிறது என்றாலும் இந்நேரம் வரை அரசின் செவிகளில் இவை விழவே இல்லை.
உதவி செய்யும் செய்யும் குழுக்கள் இம்மாதிரியான நேரங்களில் உதவும் என்றாலும், மீட்க முடியாத இடங்களில் சிக்கி இருக்கும் உடல்களை அங்கேயே விட்டுவிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
இத்தனை த்ரில் மிகுந்த எவரெஸ்ட் பயணம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.