கேயாஸ் தியரி (Chaos Theory) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா? சரி எளிதாக விளக்கிவிடலாம். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருள்களும், இயக்கங்களும், நிகழ்வுகளும் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவை. இன்னும் சுருக்கினால் இப்படிச் சொல்லலாம். நீங்கள் இன்று காலை குடிக்கும் குடிநீரின் அளவு மாறுபடுவது, உலகத்தின் மறுகோடியில் உள்ள சவானாப் புல்வெளியில் வசிக்கும் குரங்கின் உடல்நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும். பொய் என்கிறீர்களா? அறிவியலுக்கு மற்றொரு பெயரும் அதுதான்.
முன்பே சொன்னதுபோல் இந்த உலகத்தில் நடக்கும் அத்துனை நிகழ்வுகளும் சங்கிலித்தொடர் போல இணைந்தவை. எரிமலை வெடிப்பிற்கும் உங்கள் ஊர் குளம் வற்றிப்போவதற்கும் கூட சம்பந்தம் இருக்கிறது. அப்படித்தான் உலகளாவிய வெப்ப உயர்வு டெங்கு காய்ச்சலைக் கொண்டுவந்திருக்கிறது. சந்தேகமிருந்தால் அடுத்த பாராவைப் படிக்கவும்.

வெப்பமும் கொசுவும்
உலகத்தின் சராசரி வெப்பநிலை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்ட காலத்திற்கு முன்னால் இருந்த வெப்பநிலையை விட சென்ற நூற்றாண்டு சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. இன்னும் அடுத்த ஐம்பது வருடங்களுக்குள் சராசரி வெப்பநிலை உயர்வு இரண்டு டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. சரி, இதற்கும் கொசுவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ?
பூமியில் வெப்பம் உயர உயர காலநிலை மாற்றம் நிகழுகிறது. பருவ நிலை மாற்றம் என்றும் இதனைச் சொல்லலாம். இதனால் கொசு மற்றும் சில நோய்பரப்பும் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகிறது. 1950 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெங்குக் காய்ச்சலை உண்டுபண்ணும் ஏடிஸ் கொசுவின் உற்பத்தி 7.8 % அதிகரித்துள்ளது.மேலும் ஜிகா, டெங்கு போன்ற நோய்களை விளைவிக்கும் கொசுக்களின் உற்பத்தி பூமியின் வெப்பம் அதிகரிக்கும் போது அதிகரிப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத்துறை பேராசிரியர் Kristie Ebi தெரிவித்துள்ளார்.

நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்கள் என ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் பட்டியலில் நம் நாடும் உள்ளது. ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சுற்றியுள்ள நாடுகளில் ஏற்படும் காலரா நோய்க்கு முக்கியக்காரணம் வெப்ப உயர்வு தான் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்பு
உலக நாடுகள் அனைத்தும் கவனத்தைக் குவித்திருக்கும் இப்பிரச்சனையில் ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதிக பணத்தை செலவழித்து இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதும் இயற்கைசார் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் 4.8 % காலநிலை மாற்றத்திற்குச் செலவழிக்க பாரீஸ் மாநாட்டில் முன்மொழியப்பட்டது நினைவிருக்கலாம்.
எதிர்காலத்தில் இயற்கை நமக்கு நண்பனாக இருக்க வேண்டுமா? எதிரியாக இருக்கவேண்டுமா ? என்பதை நம் கையிலேயே ஒப்படைத்திருக்கிறது இயற்கை. அதன் பிரம்மாண்ட அங்கத்தில் மனிதன் ஓர் உறுப்பினர் மட்டுமே. நாம் கொடுப்பதை அப்படியே நமக்குத் திருப்பிக்கொடுக்கும் இயற்கையைக் காப்பதைத் தவிர மனித குலம் உய்ய வழி இல்லை என்பதே நிஜம்.

கடைசியாக : மறுபடியும் கேயாஸ் மூலம் சொல்லிப் பார்ப்போமா? டெங்குக் காய்ச்சல் தமிழகத்தில் வந்ததற்கு அமெரிக்காவில் பிளாஸ்டிக்கை எரித்த பெயர் தெரியாத ஆசாமி ஒருவர் காரணமாக இருக்கலாம். அதேபோல் ஆப்பிரிக்காவில் எபோலோ வந்ததற்கும் நாம் காரணமாக இருந்திருக்கலாம். அதற்காக மரம் வைக்காமல் விட்டுவிடாதீர்கள். அடுத்து வரும் தலைமுறையினருக்கு நம்மால் கொடுக்க முடிந்த ஒரே சிறந்த பரிசு இயற்கையை பாதுகாக்கக் கற்றுக்கொடுப்பது தான். இல்லையேல் இயற்கையின் கோரமுகத்தைக் காண தயாராகிக்கொள்ள வேண்டியதுதான்.