சமூக வலைதளங்களில் 10 Year Challenge பயனாளர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரங்கு பெட்டியிலிருக்கும் கருப்புவெள்ளை புகைப்படங்கள் எல்லாம் தற்போது பேஸ்புக்கில் வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. பசுமை நிறைந்த பழைய நினைவுகளை அசைபோட எந்த மனிதனுக்குத்தான் ஆசை இருக்காது. தமக்குப் பிடித்த நடிக, நடிகையரின் 10 Year Challenge புகைப்படங்களை தேடித்தேடி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் அனைவரும் பார்க்கவேண்டிய சேலஞ் புகைப்படம் ஒன்று உள்ளது.

பேஸ்புக் ஐ.டி என்ன என்கிறீகளா? பூமி என்று போட்டுப்பாருங்கள். நாம் அனைவரும் தான் அந்த கணக்கினை கையாண்டு வருகிறோம். புரஃபைல் போட்டாவை ஒவ்வொரு வருடமும் மாற்றியிருக்கிறோம். அப்படி கடந்த பத்து ஆண்டுகளில் இந்த உலகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது.
ஒரு வருடத்திற்கு அழிக்கப்படும் காடுகளின் பரப்பு சுமார் 157.9 லட்சம் ஹெக்டேர் ஆகும்.
இயற்கையின் எல்லா அடுக்குகளிலும் வெப்பமயமாதலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இதனால் மனிதன் உட்பட உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் நேரடி மற்றும் மறைமுக பாதிப்புகள் நிகழ்கின்றன. உதாரணமாக பெருகிவிட்ட செயற்கை உரங்கள் மற்றும் பூச்சுக்கொல்லி மருந்துகளினால் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சாகுபடிக்கு உதவாமல் தரிசு நிலமாக மாறியுள்ளது. ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருந்த நீரின் இருப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்திருக்கிறது. மேலும் இதனால் நன்னீர் உயிரினங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன.

காடுகள் அழிப்பு
மனிதகுல வரலாற்றில் இதற்குமுன்பு இத்தனை வேகமாய் காடுகள் அழிக்கப்பட்டதில்லை. காடுகள் அழிப்பைப்பற்றி பல அதிர்ச்சி தரத்தக்க புள்ளிவிவரங்கள் நம் முன்னே இருக்கின்றன. ஒரு வருடத்திற்கு அழிக்கப்படும் காடுகளின் பரப்பு சுமார் 157.9 லட்சம் ஹெக்டேர் ஆகும். ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மைப் பிரிவான FAO வின் அறிக்கையின்படி உலகில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில் பாதியளவு அழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் நூறு வருடங்களில் காடுகளே இந்த பூமியில் மிஞ்சாது என நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக தென்னமெரிக்கா மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காடுகள் அழியும் வேகம் சுற்றுச்சூழல் ஆராய்சியாளர்களை கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

கடல்மட்டம் உயர்தல்
பூமியின் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் உயர்வு காரணமாக துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருக ஆரம்பிக்கின்றன. இது கடல்மட்டம் உயர வழிவகுக்கிறது. நூறாண்டுகளில் உயரவேண்டிய சராசரி வெப்பநிலை பத்து வருடங்களுக்குள் உயர்ந்திருக்கிறது. கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் 290 நகரங்கள் இதனால் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் 1917 ஆம் ஆண்டும், 2005 ஆம் ஆண்டும் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு என நம்மை சூழ்ந்துள்ள அபாயங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் நாம் தான் இவையனைத்தையும் உருவாக்கினோம். உலகம் எத்தனை தடைகள் வந்தாலும் அதன் அச்சில் சுழன்றுகொண்டுதான் இருக்கும். இரவு பகல் மாற்றம் நிகழத்தான் செய்யும். ஆனால் நமக்கான உலகமாக அது இருக்காது.
பூமிக்கு அடுத்த புரஃபைல் போட்டாவாக எதை வைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? பசுமையின் மோனப் புன்னகையையா? அல்லது வறண்டுபோன பாலைச் சிரிப்பையா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அடுத்த பத்து வருட சேலஞ்சும் வரும். பூமியும் தனது புகைப்படத்தை மாற்றியிருக்கும். தேர்வுகள் தவறும் பட்சத்தில் பூமியின் புகைப்படத்தை லைக் செய்யத்தான் ஆளிருக்காது என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.