யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள். ஆஃப்ரிக்கா கண்டத்தின் பாதி பகுதிகளில் வாழ்பவை ஆஃப்ரிக்க யானைகள். ஆஃப்ரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்றே சிறியவை.
யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆச்சரியப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இந்த அழகிய, அறிவார்ந்த மற்றும் அமைதியான விலங்குகள் பற்றிய விழிப்புணர்வுக்காக, யானை பற்றிய ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள் இங்கே.
யானை நீச்சல்

யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய ஆட்டம் போடுபவை. நீரில் மூழ்கியும், தண்ணீரை உடலின் மீது பீய்ச்சி அடித்தும் குதூகலத்துடன் விளையாடுபவை. உங்களுக்கு தெரியுமா? யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும்.
இவ்வளவு பெரிய யானைகள் எப்படி மிதக்கின்றன? யானையின் மிகப்பெரிய உடலே அது எளிதில் மிதப்பதற்கு உதவுகிறது. நீந்தும் போது யானை, தனது பெரிய நுரையீரல்களால் மிதக்கும் திறனை பெறுகிறது. தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டி காற்றை சுவாசிக்கிறது. யானை தனது பெரிய உடலைத் தாங்க கால்களை எப்போதும் பயன்படுத்தும். மிதப்பதால் யானை தனது கால்களுக்கும், மூட்டுகளுக்கும் ஓய்வைத் தருகிறது.
யானையின் தோல்

யானையின் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டது. யானையின் தோல் தடிமனாக இருந்தாலும், தன் மீது ஒரு சிறு ஈ அமர்வதைக் கூட உணர்ந்து கொள்ளும்.
யானையின் கர்ப்ப காலம்

பாலூட்டி வகைகளிலேயே மிக அதிக கர்ப்ப காலம் கொண்டது யானை மட்டும் தான். 22 மாதங்கள் குட்டியை சுமக்கிறது. மிக மிக அரிதாக எப்போதாவது இரண்டு குட்டிகளை ஈனும். யானைகளின் சராசரியாக 60 வயது வரை வாழ்பவை என்ற போதும், பெண் யானை 50 வயது வரை கர்ப்பம் தரித்து குட்டியை ஈனும்.
யானைக்குட்டி

புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு கண் பார்வை தெரியாது. யானைக் குட்டி பிறக்கும் போது அதிகபட்சமாக 115 கிலோ எடை இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிதாக இருந்தாலும் கூட பிறந்த சிறிது நேரத்திலேயே யானைக்குட்டியால் எழுந்து நிற்க முடியும். காட்டில் இருக்கும் பிற வேட்டை விலங்குகளான சிங்கம், புலி ஆகியவற்றிடம் இருந்து தப்பிக்க உடனடியாக எழுந்து நிற்பதும், நடப்பதும் அவசியம். யானைகளின் மரபணுவிலேயே பரிணாம வளர்ச்சியால் உருவான எச்சரிக்கை குணத்தால் விரைவில் எழுந்து நிற்பது சாத்தியம் ஆனது.
யானை வாசனையை நுகரக்கூடியது

யானைகள் காற்றில் வரும் வாசனையைக் கொண்டு சுற்றுப்புறத்தை அலசுகின்றன. வேட்டை விலங்குகள் அருகில் இருந்தாலோ அல்லது வேறு எந்த வகையிலுமோ இருக்கும் இடம் பாதுகாப்பாக இல்லையெனில், கூட்டமாக அவ்விடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான வேறு இடத்துக்குச் சென்று விடும்.
யானையின் பிளிறல் சத்தம்

யானை பல வகையான ஒலியை எழுப்பக்கூடியது. உற்சாகத்தின் போதும், துன்பத்தின் போதும் அல்லது ஆக்ரோஷமாக இருக்கும் போதும் துதிக்கையை தூக்கி எழுப்பும் பிளிறல் ஒலியை 9 கி.மீ க்கு அப்பால் உள்ள மற்றொரு யானையால் கேட்க முடியும். மேலும், தனது காலின் கீழ் உள்ள தசையின் மூலம் அதிர்வுகளையும் கேட்கக்கூடியது யானை. மேலும், தனது துதிக்கையை தரையில் வைத்தும், அதிர்வுகளை உணர்ந்து அதற்கேற்றது போல் செயல்படக் கூடியது.
யானையின் தந்தம்

யானையிடம் இருக்கும் ஒரு கூர்மையான ஆயுதம் அதன் தந்தம் ஆகும். வெட்டுப்பற்கள் தான் பெரிதாக வளர்ந்து தந்தமாகிறது. பிற விலங்குகளுடன் சண்டையிட தந்தத்தை பயன்படுத்துகிறது. சில நேரங்களில் சண்டையின் போது, தந்தங்கள் உடைந்து விடக்கூடும். பாதியளவு தந்தம் உடைந்தால் மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால், வலுவான மற்றொரு யானையுடன் மோதும் போது தந்தம் முழுவதுமாக முறிந்து விடக்கூடும். அவ்வாறு முறிந்துவிட்டால், ரத்தம் கசிய வலியுடன் பிளிறிக்கொண்டு உயிரை காப்பாற்றிக்கொண்டு ஓடிவிட வேண்டியது தான். விழுந்த தந்தம் மீண்டும் முளைக்காது. அதன் பிறகு காலம் முழுதும் தந்தம் இல்லாமல் தான் வாழ வேண்டும். சரி! இவ்வளவு ஆபத்து இருக்கும் போது எதற்காக சண்டையிடுகின்றன என்கிறீர்களா? வேறென்ன… பெண் யானைக்காகத்தான்.
யானை துதிக்கை

யானை 40000 தசைகள் உள்ள தனது, துதிக்கையை பயன்படுத்தி ஒரு பொருளின் அளவு, வடிவம் மற்றும் வெப்பநிலையை உணரக் கூடியது. யானை துதிக்கையை உணவை எடுக்கவும், தண்ணீரை உறிஞ்சி அதன் வாயில் ஊற்றி குடிக்கவும் பயன்படுத்துகிறது. துதிக்கையை நிலத்தில் ஊன்றி சுற்றுப்புற அதிர்வுகளையும் கேட்கும்.
கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்.

உலகில் வாழும் விலங்குகளில், கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய விலங்குகள் வெறும் 5 தான். மனிதர்கள், குரங்குகள், மாக்பை(Magpie) எனப்படும் ஒரு வகை பறவை, டால்ஃபின் தவிர கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் அறிவுள்ள விலங்கு யானை.
யானைகள் குடும்பம்

யானைகள், வயது முதிர்ந்த பாட்டி யானையின் தலைமையில் கூட்டமாக வாழக்கூடியவை. ஒரு யானைக்குட்டி புகார் செய்தால், கூட்டத்தில் இருக்கும் அனைத்து யானைகளும், முழு அரவணைப்போடு அதைத் தொட்டு ஆறுதல் அளிக்கும். யானைகள் மகிழ்ச்சி, சோகம், இரக்கம், எச்சரிக்கை உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.
வயது வந்த ஆண் யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியே சுற்றித் திரியும், அல்லது, பெண் யானைகளே அதை கூட்டத்திலிருந்து பிரித்து அனுப்பி விடும். குடும்பத்தில் முழுதும் பெண் யானைகளின் ஆதிக்கம் தான். வயது வந்த ஒரு ஆண் யானை கூட கூட்டத்தில் இருக்காது.
காட்டு யானையின் சராசரி வாழ்நாள் 50 முதல் 70 ஆண்டுகள். லிங் வாங் எனறு பெயரிடப்பட்ட ஆசிய யானை மிக அதிகமாக 86 வயது வரை வாழ்ந்தது. மிகப் பெரிய யானை 11000 கிலோ எடையும், 13 அடி உயரமும் இருந்தது.
யானைகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் சிறப்பான தகவல் இருந்தால் கீழே பின்னூட்டம் இடவும். நன்றி!