அவ்வளவு எளிதில் யாரும் டைட்டானிக் கப்பலை மறந்துவிட முடியாது. பிரம்மாண்டம், உற்சாகம், சோகம், கண்ணீர். அட்லாண்டிக் பெருங்கடலில் ஏறக்குறைய நூற்றாண்டுகளுக்கு முன்னால் மூழ்கிப்போன ஒரு கப்பலை இன்னும் மனிதர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். அக்காலத்தில் டைட்டானிக்கில் பயணிப்பது ஒரு கவுரவமான செயலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்காமல் பலரும் அதற்காக ஏங்கி இருக்கிறார்கள். இன்று வரை ஏக்கப் பெருமூச்சு விடுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆமாம் டைட்டானிக் II கப்பலைத் தயாரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டைட்டானிக் II
இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கப்பல் நிறுவனமான Blue Star Line டைட்டானிக் II வை தயாரித்து வருகின்றது. மொத்தம் 9 அடுக்குகளில் 835 கேபின்கள் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தம் 2435 பயணிகள் இந்தக்கப்பலில் பயணிக்கலாம். முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு என தனித்தனியே பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பல பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன. அப்படி அதிக விலைக்கு ஏலம் போன 5 டைட்டானிக் பொருட்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
தன்னுடைய முதல் பயணத்தை துபாயில் துவங்கி நியூயார்க் செல்ல இருக்கிறது இக்கப்பல். அதிகபட்சமாக நபர் ஒன்றுக்கு 1 லட்சம் டாலர் வரை கட்டணமாக விதிக்கப்படும். 2022 – ஆம் ஆண்டு எல்லா வேலைகளையும் முடித்துத் தன் முதல் பயணத்திற்கு கப்பல் தயாராகிவிடும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்ற முறை நடந்தது போலில்லாமல் அதிகளவு பாதுகாப்பு வசதிகளை இக்கப்பலில் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும் பாதுகாப்புப் படகுகள் அதிக எண்ணிக்கையில் கப்பலில் இடம்பெறுகின்றன.

கவுரவச் சின்னம்
நியூயார்க் நகரத்தினை நோக்கி தனது பயணத்தை இங்கிலாந்திலிருந்து துவங்கிய டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின்மீது மோதியதால் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கிப்போனது. 1500 பயணிகள் அந்த விபத்தினால் மரணமடைந்தனர். ஆனாலும் இன்றுவரை அந்தக்கப்பலின் மீது இருக்கும் மக்களின் மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. உலகமெங்கிலும் டைட்டானிக் கப்பலைப் பயன்படுத்தி பல வியாபாரங்கள் நடந்து வருகின்றன.
சீனாவின் கிஜாங் (Qijang) நதிக்கரையில் டைட்டானிக் கப்பலின் மாதிரியை தத்ரூபமாகக் கட்டிமையைத்திருக்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பொறியாளர்கள். இதனால் சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் இலட்சக்கணக்கில் சீனா நோக்கிப் படையெடுக்கிறார்கள். அந்த வகையில் 2022 – ஆம் ஆண்டு துவங்கும் இந்தக் கப்பலின் பயணத்தை இந்த உலகமே எதிர்பார்த்து நிற்கிறது.