மரணமில்லா வாழ்வு. எத்தனையோ பேர் இன்றும் அதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்றில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களே இதற்கான வழிமுறைகளைத் தேடி அலைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சித்தர்கள் கூட இதனைப் பற்றி விவரித்திருக்கிறார்கள். ஐம்புலனையும் அடக்கிய ஒருவரால் மிக நீண்ட காலம் வாழமுடியும் எனப் பல சித்தர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால், சாகாமல் இருக்க விரும்பிய ஆசாமிகள் ஐம்புலனை அடக்குவதில் எல்லாம் அக்கறை காட்டுவதில்லையே. பழைய சீனாவிலும் இப்படிப்பட்ட ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.

சீனர்களின் பயம்
2000 வருடத்திற்கு முன்பு சீன மருத்துவர்கள் தீவிரமாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள். மரணமில்லா மருந்தைக் கண்டுபிடிக்கும்படி அரசர் கின் ஷி ஹூவாங் (Qin Shi Huang) மருத்துவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அரசர் கொஞ்சம் கோபக்காரர் வேறு. தாமதமானால் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. கொடுங்கோலன் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நல்லவர் என்றும் சொல்ல முடியாது. அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
படித்துவிட்டீர்களா ? அரசர் எப்படிப்பட்டவர் என்று புரிந்ததா? அவரிடம் பொய் சொல்ல முடியுமா? அல்லது காலத்தைத் தான் தாழ்த்த முடியுமா? ருத்ர மூர்த்தி. பவள வண்ணன். அரசர் கின் – னிற்குப் பயந்து கையில் கிடைத்தை எல்லாம் போட்டு லேகியம் கிண்டினார்கள் மருத்துவர்கள்.

வந்தது விபத்து !!
ஒவ்வொரு முறையும் மரணமில்லா மருந்தைத் தயாரிக்கும் முயற்சி தோல்வியையே சந்தித்தது. ஆனால் மருத்துவர்கள் விடுவதாய் இல்லை. இடையிடையே மன்னர் வேறு மருத்துவக் கூடத்துக்கே விஜயம் செய்தார். வருபவர் சும்மாவும் வருவதில்லை. “என் உடைவாள் எவ்வளவு பளபளப்பாய் இருக்கிறது” என்று மருத்துவர்களிடம் கேட்டுவிட்டுப் போவார். முதுகுத்தண்டு உறைந்து போகும் மருத்துவர்களுக்கு.
இப்படி அவசரமாக நடந்து கொண்டிருந்த ஆராய்ச்சியின் போது ஒருநாள் …. மலையுச்சிக்குச் சென்றிருந்த மருத்துவர் வித்தியாசமான இரு பொருட்களைக் கொண்டுவந்தார். அதைப்பார்த்த மற்ற மருத்துவர்களின் சிறிய கண்கள் பெரிதாய் விரிந்தன. அடுத்து நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் ஆனந்தக் கூத்தாடினார்கள். வழக்கம் போல கொண்டு வந்த பொருட்களை அடுப்பில் போட்டார் தலைமை மருத்துவர் மருந்து தயாரிக்க. அவ்வளவுதான், பெரிய சத்தத்துடன் அடுப்பு வெடித்துச் சிதறியது. கந்தகத்தையும், சல்பரையும் தீயினில் போட்டால் எரியாமல் மழையா வரும்.

உதித்தது சிந்தனை !!
கருகிய முகத்துடன் மன்னரின் முன்னால் நின்றார் மருத்துவர். நடந்ததைக் கேட்ட அரசரின் மூளையில் வித்தியாசமான ஒரு சிந்தனை உதித்தது. நான் தான் சொன்னேனே, ஆள் கொஞ்சம் ஒரு மாதிரி என்று. மருந்து மறுபடியும் தயாரிக்கப்பட்டு மூங்கிலின் உள்ளே வைத்து வெடிக்கிறதா ? என சோதனை செய்யப்பட்டது. டமார்… அதுதான் உலகின் முதல் பட்டாசு.
அதன் பின்னால் வெடிமருந்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் முடுக்குவிக்கப்பட்டன. 10 – ஆம் நூற்றாண்டு வாக்கில் சீனர்கள் வெடிகுண்டு தயாரிக்கத் தொடங்கினார்கள். அடுத்த 200 வருடத்திற்குப் பின்னால் ராக்கெட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.

பரவிய பட்டாசு
1295 – ஆம் ஆண்டு சீனாவிற்குச் சென்ற மார்க்கோ போலோ திரும்பி வரும்போது மூட்டை மூட்டையாய் பட்டாசுகளைக் கொண்டு வந்து ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார். மனிதனுக்கு நல்ல செயல்கள் எல்லாம் எளிதில் வந்துவிடுவதில்லை. தீமையும், பொறாமை எல்லாம் படுஜோராக வரும். ஐரோப்பியர்களும் வெடிகுண்டு தயாரிக்கக் கற்றுக்கொண்டார்கள் பட்டாசை ஆசையோடு பார்த்தவர்கள் அதனைப் பக்கத்து வீட்டின் மேல் போட்டுப் பார்த்தார்கள். அடுத்த தெரு, அடுத்த ஊர், இப்போது அடுத்த நாடு. எங்கேயோ தொடங்கிய பட்டாசின் கதை எங்கேயோ போய் எப்படியோ மாறிவிட்டது. சரி விடுங்கள். இந்தத் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும் போது மறக்காமல் அரசர் கின் – னிற்கு ஒரு நன்றி சொல்லிவிடுங்கள்.