காப்பி குடிக்கும் பழக்கம் நம் அனைவரிடமும் இருக்கிறது. என்றாவது காப்பி ஏன் இப்படி சுவைக்கிறது என்று கேள்வி கேட்டிருக்கிறோமா? ஆனால் இதே கேள்விக்கான பதிலை 200 வருடங்களுக்கு முன்னரே ஃபிரடலீப் ஃபெர்டினான்ட் ரஞ் (Friedlieb Ferdinand Runge) என்னும் ஜெர்மானிய வேதியியல் விஞ்ஞானி கண்டுபிடித்துவிட்டார். அவருடைய 225 வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இன்று கூகுள் டூடுல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. அப்படி என்ன கண்டுபிடிப்பு என்கிறீர்களா? காஃபின் என்னும் பொருளைத் தான் ரஞ் கண்டறிந்தார்.
ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரத்தில் பிப்ரவரி 8, 1794 ஆம் ஆண்டு பிறந்தவர் ரஞ். பெர்லின் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் படிப்பை முடித்த இவர் பிரெஸ்லா (Breslau) பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியானார். வேதியியல் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டிய ரஞ் தான் மலேரியாவிற்கு மருந்தாகப் பயன்படும் குயினைன் என்னும் மருந்துப்பொருளைக் கண்டுபிடித்தவர்.
காப்பி பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
விஷப்பரிட்சை
விஷத்தன்மை வாய்ந்த deadly nightshade எனும் செடியின் வேரிலிருந்து perennial என்னும் பொருளைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் அவரது கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் தனது வேதியியல் மீதான ஆர்வத்தை ரஞ் அவர்களால் குறைத்துக்கொள்ள முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட பின்னரே Johann Wolfgang von Goethe என்னும் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ரஞ்சிற்கு உதவினார். அதன்மூலமே காப்பிக் கொட்டைகளில் இருக்கும் காஃபின் என்னும் பொருள்தான் அதன் சுவைக்குக் காரணம் என்று கண்டுபிடித்தார் ரஞ்.

இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ரஞ், 1867 ஆம் ஆண்டு தனது 73 ஆம் வயதில் காலமானார். அடுத்தமுறை காப்பி அருந்தும்போது மறக்காமல் ரஞ் அவர்களுக்கு ஒரு நன்றி சொல்லிவிடுங்கள்.