1945 ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போர் உச்சகதியில் இருந்த நேரம். அமெரிக்கா முத்து துறைமுக தாக்குதலில் இருந்து சற்றே மீண்டிருந்தது. அதன்காரணமாக அமெரிக்க கப்பற்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் தான் அந்த விபத்தும் நடந்ததது. கிழக்கு கடற்கரையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த USS Eagle PE-56 என்னும் கப்பல் விபத்திற்கு உள்ளானது. 13 பேரைத் தவிர மொத்தம் 49 வீரர்களுடன் கப்பல் கடலின் ஆழத்திற்கு விரைந்தது. பாய்லர் வெடித்தது தான் இந்த விபத்திற்கு காரணம் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் விபத்தில் இருந்து மீண்டவர்கள் அனைவரும் கப்பல் மூழ்குவதற்கு முன் நாஜிக்களின் யூ போட் எனப்படும் ஜெர்மனியின் போர்க்கப்பல் ஒன்றைப் பார்த்ததாக சாட்சி சொல்லவே கப்பல் விபத்து பற்றிய கதைகள் ஒவ்வொன்றாகக் கிளம்பின.

அத்தனை மர்மங்களையும் விடுவிக்க வேண்டுமானால் கப்பலை வெளியே எடுத்துவரவேண்டும். இரண்டாம் உலகமகா யுத்தம் முடிந்தவுடன் சிறிது காலம் இந்த கப்பல் பற்றிய பேச்சுகளும் குறைந்திருந்தன. ஆனால் அடுத்த ஒரு வருடத்திற்குள் அரசே முன்வந்து இந்த கப்பலைத்தேடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால் அதனைக் கண்டுபிடிப்பது அத்தனை எளிமையாக இருக்கும் என்றோ, அடுத்த 75 வருடம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்றோ யாரும் எதிர்பார்க்கவில்லை.
கடந்த 2018 ஆம் ஆண்டு Nomad Exploration Team என்னும் ஆழ்கடல் மீட்புக் குழு வீரர்களின் நான்கு ஆண்டு விடா முயற்சியால் USS Eagle PE-56 கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடற்கரையிலிருந்து 6 மைல் தொலைவில் கடலடியில் கிடந்தவற்றை சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் கண்டிருக்கிறது இக்குழு.

இரும்பினால் ஆன பெரும்பான்மையான பகுதிகள் துருப்பிடித்து அழிந்துவிட்ட நிலையில் போர்க்கருவிகள் மற்றும் மேலும் சில பகுதிகள் எஞ்சியுள்ளதாக வீரர்கள் தெரிவித்திருக்கின்றனர். கடலின் குளிர்ந்த நீரோட்டமும், நீரின் தெளிவில்லாத தன்மையும் இந்த தேடுதல் வேட்டையை தாமதப்படுத்தியிருக்கின்றன. கிழக்கு கடலைப் பொறுத்தவரை 20 அடிக்கு கீழே உள்ள பொருட்களைப் பார்ப்பது மிகவும் சிரமம். ஆனால் இந்தக்கப்பல் இருந்ததோ 250 அடியில்!! அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருவதால் இன்னும் சில மாதங்களில் USS Eagle PE-56 கப்பலின் விபத்திற்கான உண்மையான காரணம் அந்தக்கப்பலைப்போலவே வெளிவந்துவிடும்.