இஸ்ரேலைச் சேர்ந்த ஜியோன் மருந்து நிறுவனம் (Zion Medical) கண்டுபிடித்த எய்ட்ஸ் மருந்து முதல் முறையாக மனிதர்களிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 99 சதவீதம் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.
வளர்ந்த நாடுகளே எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கப் போராடி வரும் நிலையில் இஸ்ரேலின் இந்தச் சாதனை உலகம் முழுவதும் மருத்துவத் துறையால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.
ஹெச்.ஐ.வி எனும் சவால்
எய்ட்ஸ் பாதிப்புக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் மருந்து கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஏனெனில்,
- உலகம் முழுவதும் ஆண்டுதோறும் எய்ட்ஸ் பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 10 லட்சமாக உள்ளது.
- இந்த கொடிய பாதிப்பினால் உலகம் முழுவதும் 3 கோடியே 79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இவர்களில் ஒரு கோடியே 80 லட்சம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதிக்கப்பட்டவர்களில் 59 சதவீதம் பேருக்கு மட்டுமே உரிய சிகிச்சை கிடைத்துள்ளது. மற்றவர்கள் எய்ட்ஸ் பாதிப்பால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறக்கின்றனர்.
மருத்துவ துறையில் இருக்கும் ஆச்சரியமான உண்மை என்னவெனில், இந்தக் கொடிய நோய் பாதிப்புக்கு இதுவரையில் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பது தான். ஏனெனில், எய்ட்ஸ் என்பது ஒரே ஒரு நோய் அல்ல. எதிர்ப்பு சக்தியை அழித்து பல்வேறு நோய்களை உடலுக்குள் அனுமதிக்கும் வேலையைத் தான் ஹெச்.ஐ.வி வைரஸ் செய்கிறது. இதனாலேயே ஆய்வுகள் ஒரு முடிவுக்கு வராமல் இருந்தன.
வெறும் 4 வாரத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை செல்களையும் அழிக்கக்கூடியது கம்மோரா (Gammora) எனப்படும் மருந்து!
தற்போதைய மருந்துகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் வாழும் காலத்தை மட்டும் சற்று நீட்டிக்கக் கூடியவை. முழுமையாக பாதிப்பை சரி செய்யும் மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சாதித்த இஸ்ரேல்
பல்வேறு நாட்டு அரசுகள் இதற்கான ஆராய்ச்சிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து வருகின்றன. இந்த நேரத்தில் தான் ஜியோன் மருந்து நிறுவனம், எய்ட்சால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கானவர்களின் மனதைக் குளிர வைக்கும் செய்தியை வெளியிட்டுள்ளது.

இதுவரையில் எய்ட்ஸ் செல்லை ஒழிப்பது தொடர்பான பாதையில் தான் ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. ஜியோன் நிறுவனம், இதற்கு மாற்றாக எய்ட்சால் பாதிக்கப்பட்ட செல்களை ஒழிக்கும் ஆராய்ச்சி என்ற புதிய பாதையில் பயணித்து வெற்றி கண்டுள்ளது.
அமெரிக்க காமிக்ஸ் புத்தகங்களில் வரும், அழகான பச்சை நிற இளம் பெண்ணான கம்மோரா (Gammora) என்ற பெண்ணின் பெயர் இந்த மருந்துக்குச் சூட்டப்பட்டுள்ளது. கம்மோரா மிக நுட்பத்துடன் செயலாற்றும் தன்மை கொண்டது. அதாவது, எய்ட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட மனித செல்களில் புகுந்து அதன் டிஎன்ஏ வை உடைக்கிறது. இதனால், அந்த செல் வளர முடியாமல் வாழ்நாளை இழக்கும். வெறும் 4 வாரத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை செல்களையும் அழித்துவிடும் கம்மோரா. எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களிடம் முதல் முறையாக வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், இந்தச் செய்தி முழுக்க உண்மையானதல்ல எனவும் சில மருந்து நிறுவனங்கள் புகார் தெரிவித்து வருகின்றன. ஆனால், ஜியோன் நிறுவனம் அதை மறுத்துள்ளது. எது எப்படியோ நோயாளிகள் குணமடைந்தால் சரி தான்.