பெரும்பாலும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு இருக்கும் பெரும் கவலை, தங்கள் பிள்ளை படித்ததை மறந்து விடுகிறது என்பது தான். இதற்காக மிகவும் கவலைப் படத் தேவையில்லை. குழந்தைகள் படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு எளிய வழியிருக்கிறது. நினைவுத்திறன் பயிற்சியின் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.
மூச்சுப் பயிற்சி
குழந்தைகள் மட்டுமின்றி பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பெரியவர்களுக்கும் ஞாபக மறதியானது ஏற்படுகிறது. அதைப் போக்குவதற்கு மூச்சுப் பயிற்சி தான் எளிய வழி. அதை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.
முதலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியிடுங்கள். பத்து அல்லது இருபது முறை இப்படிச் செய்து விட்டு, பிறகு ஒற்றை நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு மற்றொரு நாசியின் வழியே காற்றை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிடவும். இதுபோல சில முறைகள் செய்த பிறகு, அந்தத் துவாரத்தை மூடிக் கொண்டு பின்னர் மற்றொரு துவாரம் வழியே மூச்சுப் பயிற்சி செய்யவும்.
மாணவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் 20 நிமிடம் இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், மூளைக்குப் போதுமான அளவில் ஆக்சிஜன் கிடைத்து சுறுசுறுப்பாக செயல்படும். உடலும் புத்துணர்ச்சியுடன் இயங்குவதைக் காண்பீர்கள்.
ஞாபக சக்தி அதிகரிக்க
- வேலைகளை சீக்கிரம் முடித்து விட்டு சரியான நேரத்திற்குத் தூங்கச் செல்வது மூளைக்குப் போதிய ஓய்வைக் கொடுத்து நினைவுத்திறன் சிறப்பாகச் செயல்படத் துணை செய்யும்.
- சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதும், மூளை சிறப்பாகச் செயல்படத் துணை செய்யும். மூளைக்கு அவசியமான ஒமேகா-3, ஒமேகா-6 உள்ளிட்ட சத்துப் பொருட்கள் நிரம்பிய உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
- ஞாபக சக்திக்குக் காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்குக் கொண்டு வந்து விடும்.
- உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதாகக் கருதி, உணவைக் குறைத்தால் அது மூளை இயக்கத்தைத் தடை செய்து ஞாபகசக்திக் குறைவை ஏற்படுத்தலாம்.