மறதி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் சாதாரணமான நோய் தான், மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள், மூளைச் செல்களின் செயலிழப்பு போன்றவற்றால் இந்த மறதி ஏற்படுகிறது.
அல்ஸைமர் எனும் மறதி நோய்
ஆனால், வயதானவர்களுக்குத் தான் இதன் பாதிப்பு அதிகம். மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்று தேடுவதில் தொடங்கி, வந்த பாதையை மறந்து வீட்டுக்குத் திரும்பத் திண்டாடுவது, பேசிக் கொண்டிருக்கும் போதே வார்த்தைகளை மறந்து விடுவது, அருகில் இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து, கடைசியில் ‘நான் யார்?’ என்பதே தெரியாமல் போவது வரை கொண்டு போய் விடும். முதியவர்களுக்கு மறதி வருவது இப்போது அதிகரித்து வருகிறது.
இந்த மறதிக்குப் பெயர் ‘அல்ஸைமர்’ நோய் (Alzheimer). இது பெரும்பாலும் மரபியல் ரீதியாகத் தான் வருகிறது. உலக அளவில், 60 வயதைத் தாண்டிய 100 பேரில் 5 பேரையும், 75 வயதைக் கடந்தவர்களில் 4 பேரில் ஒருவரையும் இது பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும், 38 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூளையைப் பாதிக்கும் கோளாறுகளினால் உருவாகும் நோய் அறிகுறிகளின் தொகுதிக்கான பெயரே அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயாகும். இந் நோய் ஒவ்வொருவரையும் வேறுபட்ட விதங்களில் பாதிக்கின்றது. இருந்தாலும், இந்நோயுள்ளவர்களில் அனேகமானவர்களுக்கு ஞாபகமறதி, முடிவெடுக்க முடியாமை, பகுத்தறிவு இழப்பு மற்றும் அவர்களின் மனநிலை மற்றும் நடத்தையில் மாற்றங்கள் போன்றவை ஏற்படுகின்றன.
அல்ஸைமர் உட்பட அல்ஸைமர் மற்றும் அது சம்பந்தப்பட்ட நோய்கள் மூன்று நிலைகளைக் கொண்டவை:
- படிப்படியாக அதிகரிக்கும் நிலை (Progressive): மூளைக் கலங்கள் படிப்படியாக சேதமடைந்து இறுதியில் இறப்பதால் நோய்க்குறிகள் படிப்படியாக மோசமாகும்.
- சிதையும் நிலை (Degenerative): நோயுள்ளவரின் மூளைக் கலங்கள் (நரம்புக்கலங்கள்) சிதைகின்றன அல்லது உடைந்து போகின்றன.
- மீளூம் தன்மையற்ற நிலை (Irreversible): அல்ஸைமர் நோய் உள்ளடங்கலான அனேகமான அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுத்தப்படும் சேதம் சீர் செய்யப்பட முடியாதது.
யாருக்குப் பாதிப்பு அதிகம்?
பரம்பரையில் யாருக்காவது இது வந்திருந்தால் வாரிசுகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம். ஆண்களுக்கே இதன் தாக்குதல் அதிகம். அதிலும் பக்கவாதம் வந்த ஆண்களை மிக விரைவில் பாதிக்கிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனை, நரம்பு மண்டலக் கோளாறுகள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் ரத்தக் குழாயில் கொழுப்பு படிந்தவர்களுக்கும் பார்கின்சன் நோயாளிகளுக்கும் அல்ஸைமர் விரைவில் பாதிக்கிறது.
என்ன காரணம்?
வயது ஏற ஏற, மூளை செல்கள் சுருங்கும் போது ‘அமை லாய்டு’ (Amyloid), ‘டௌ’ (Tau) எனும் இரண்டு புரதப்பொருட்கள் அவற்றில் படிகின்றன. இதனால் பூச்சி அரித்த இலைகள் உதிர்வதைப் போல மூளை செல்கள் சிறிது சிறிதாக இறந்து போகின்றன. இதன் விளைவால் ஞாபக சக்தி குறைந்து அல்ஸைமர் நோய்க்கு வழி விடுகிறது.
அல்ஸைமரின் அறிகுறிகள்
அல்ஸைமர் நோயின் ஆரம்பத்தில், அன்றாட வாழ்வில் சின்னச் சின்ன விஷயங்கள் மறந்து போகும். உதாரணமாக, காலையில் சாப்பிட்ட சாப்பாடு, சந்தித்த நபர், சென்ற இடம் ஆகியவை மறந்து போகும். அடுத்த கட்டத்தில், அன்றாட செயல்களைச் செய்வது மறந்து போகும். பல் தேய்ப்பது, குளிப்பது போன்றவற்றைக் கூட வீட்டில் உள்ளவர்கள் நினைவு படுத்த வேண்டியது வரும்.
கடையில் கணக்குப் பார்த்து மீதி சில்லரையை வாங்காமல் வருவது, பெண்களுக்கு சமையல் செய்வதில் சிக்கல், சாலை விதிகளில் குழப்பம், வங்கிப் பரிமாற்றங்களில் தடுமாற்றங்கள் என மறதி அதிகமாகிக் கொண்டே போகும். அடுத்து அறிவு சார்ந்த செயல்பாடுகள் மறந்து போகும். உதாரணமாக, ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபடுகிறாரோ அந்தத் தொழில் சார்ந்த அறிவு குறைந்து கொண்டே வரும். நோய் முற்றிய நிலையில் ஞாபகம் மொத்தமே அழிந்து போகும்.
வழக்கமாக நடந்து செல்லும் பாதையை மறப்பதில் தொடங்கி, நெருங்கிப் பழகும் முகங்கள், உறவினரின் பெயர்கள் வரை நினைவில் நிற்காது. உணவை வாயில் போட்டுக் கொண்டால் அதை விழுங்க வேண்டும் என்று கூட தோன்றாது. மென்று கொண்டே இருப்பார்கள் அல்லது துப்பி விடுவார்கள். மனைவியையே ‘இவர் யார்?’ என்று கேட்கும் அளவுக்கு, மறதி நோய் முற்றி விடும்.
தடுப்பது எப்படி?
அறுபது வயதைக் கடந்தவர்கள் ஓய்வு பெற்றாலும், வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஏதாவது ஒரு வேலையில் மூழ்குவது நல்லது. தினமும் செய்தித்தாள் படிப்பது அவசியம். அவற்றில் இடம் பெறும் கணக்குப் புதிர்கள், சுடோகு மற்றும் குறுக்கெழுத்துப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இப்படி மூளைக்கு ஏதாவது வேலை கொடுப்பது அவசியம்.
நாட்டு நடப்புகளை அப்டேட் செய்து கொண்டே இருங்கள். இதற்கு சமூக வலைதளங்களில் கொஞ்ச நேரம் மூழ்கலாம். நண்பர்களுடனும், பேரன் பேத்திகளுடனும் அடிக்கடி பேசுங்கள். தனித்து இருப்பதைத் தவிருங்கள். நேரத்துக்கு உறங்குங்கள். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ரத்த அழுத்தமும் ரத்தக் கொழுப்பும் கட்டுக்குள் இருக்க வேண்டும்.
இனிப்பும், கொழுப்பும் நிறைந்த உணவுகளைக் குறைத்து, ஆன்டாக்சிடென்ட், வைட்டமின் ஏ, இ, சி, மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்துங்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலமுள்ள மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு உடற்பயிற்சி செய்யுங்கள். புகையை விட்டொழியுங்கள். மதுவை மறந்து விடுங்கள். அல்ஸைமர் உங்களை நெருங்கவே தயங்கும்!