அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் சர்க்கரை நோய் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிர்ச்சியளிக்கும் தகவல்களைக் கொண்டிருக்கும் அந்த ஆய்வானது உலகம் முழுவதும் 221 நாடுகளில் நடத்தப்பட்டது. அப்படிக் கிடைத்த தரவுகளின் படி 2030 – ஆம் ஆண்டிற்குள் சர்க்கரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10.5 கோடி அதிகரிக்கும் என்றும் அவர்களில் பாதிப் பேருக்கு எதிர்காலத்தில் இன்சுலின் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030
தற்போது உலகமெங்கிலும் சுமார் 40.6 கோடி மக்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச சர்க்கரை நோய்த்தடுப்புக் குழுமம் (International Diabetes Federation) குறிப்பிட்டுள்ளது. நகரமயமாக்கல், மரபணு மற்றும் உடல் செயல்பாடு குறைவு ஆகியவற்றின் காரணமாக வரும் 2030 – ஆம் ஆண்டிற்குள் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.1 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானோர் இரண்டாம் வகை சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட இருப்பதாகவும் ஆய்வினை மேற்கொண்ட தலைமை மருத்துவர் சஞ்சய் பாசு தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயின் வகைகள்
பொதுவாக சர்க்கரை நோயினை முதல் மற்றும் இரண்டாம் வகை எனப் பிரிக்கலாம். அவற்றுள் முதல் வகை சர்க்கரை நோய் இன்சுலின் பற்றாக்குறையினால் வருகிறது. கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பி அளவுக்குக் குறைவாக சுரக்கும்போது முதல் வகை சர்க்கரை நோய் வருகிறது. இதனால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலின் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உடலியக்கச் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பின்னடைவின் காரணமாக இரண்டாம் வகை சர்க்கரை நோய் வருகிறது. இவை பெரும்பாலும் போதுமான உடற்பயிற்சி, உடல் பருமன் ஆகியவற்றால் வருகிறது.

2030 – ஆம் ஆண்டிற்குள் வயது முதிர்ச்சி, நகரமயமாக்கல், உடலியக்கச் செயல்பாடு குறைதல் போன்ற காரணிகளால் 10.5 கோடி இளைஞர்களுக்கு இரண்டாம் வகை சர்க்கரை நோய் வரும் எனவும் ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்துகின்றன.
அதிகமாக சர்க்கரை நோய் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இன்சுலின் பற்றாக்குறை
சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க அதிகரிக்க இன்சுலின் உற்பத்தியும் அதற்குத் தகுந்தாற்போல் அதிகரிக்க வேண்டும். இன்சுலினை எடுத்துக்கொள்வதற்கு செலவுகள் அதிகம் பிடிக்கும் என்பதால் சந்தையில் அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது. இன்றைய நிலைக்கு மூன்று பெருநிறுவனங்கள் மட்டுமே இன்சுலின் உற்பத்தியில் இருக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் விலையேற்றம் மிக அதிகமாக இருக்கும் எனவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டின் காரணமாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் பாதி சதவிகித்தினரால் இன்சுலின் சிகிச்சையை மேற்கொள்ள முடியாமல் போகும் அபாயம் உள்ளது. அதிகமாக சர்க்கரை நோய் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது. எனவே அரசு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஏனெனில் இதனால் பாதிக்கப்பட இருக்கும் மக்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் அதிகமாகும்.
Also Read: சர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்