ஒவ்வொரு பருவ காலத்திலும், பல்வேறு நோய்கள் பரவுவது வழக்கம். இது மழைக்காலம் என்று எல்லோருக்கும் தெரியும். சில பகுதிகளில், மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
தற்போது கொரோனா பரவி வரும் சூழலில், மழைக்கால நோய்களும் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே பரவலாக இருக்கும். அதை தவிர்க்க நாம் மழைக்கால நோய்கள் எது என்று தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி பரவும் மழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. சளி உள்ளிட்ட சில நோய்கள் சாதாரணமாக வரக்கூடியது என்பதால் இந்த பட்டியலில் இல்லை.
1. ஃப்ளூ காய்ச்சல்
இது ஒருவகையான வைரஸ் மூலம் பரவும் நோய். இதனால் இருமல், சளி மற்றும் சுவாசகோளாறுடன் காய்ச்சல் ஏற்படும்.
தடுக்கும் முறை: குடிநீரை நன்கு கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். பழைய உணவுகள், குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். ஈரமான உடைகளை அணிந்து கொண்டு இருப்பதை தவிர்க்கவும். சளியால் பாதிக்கப்பட்டவர் இருமும் போது கைக்குட்டையால் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டும். உப்பு நீரில் வாயை கொப்பளித்தால் நிவாரணம் கிடைக்கும்.

2. ஆஸ்துமா
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் சுவாசக் குழாய் சுருங்கி இருக்கும். அவர்களுக்கு மழைக்காலத்தில் ஏற்படும் குளிரினால் மூச்சுத் திணறல், இருமல், சளி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆஸ்த்மாவுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை இந்த வீடியோவில் காணலாம்.
தடுக்கும் முறை: காலையிலும், மாலையிலும் முற்றிலும் வெளியில் செல்வதை தவிர்க்கவும். ஒருவேளை வெளியில் செல்ல நேரிட்டால் காதில் பஞ்சு வைத்துக் கொள்ளவும். குளிர்பானம், ஐஸ்கிரீம், பழைய உணவு வகைகள், தவிர்க்கவும். குடிநீர் மற்றும் உணவு வகைகள் மிதமான சூட்டில் உண்ணவும். யோகா, சுவாசப்பயிற்சி செய்வதால் ஆஸ்துமா பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
3. கொசுக்களால் நோய்
மழைக்காலத்தில் கொசுக்களால் அதிக நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

3.1 டெங்கு காய்ச்சல்
104 டிகிரி வரை அதிகப்படியான காய்ச்சல். தலைவலி, உடம்புவலி, வாந்தி ஏற்படும். நோய் அதிகரித்தால் உடலில் இரத்தம் உறையவும் வாய்ப்புள்ளது. அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி அருகில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கலாம். மேலும் விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.
டெங்குவை எதிர்க்கும் சித்த மருத்துவம் – கசாயங்களின் நன்மைகள்
3.2 மலேரியா
குளிர்க்காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி, வாந்தி ஏற்படும். கொசுக்கள் தேடி வந்து சிலரையே கடிக்கும். அதற்கும் காரணங்கள் உள்ளன. மலேரியாவுக்கு மருந்துகள் உள்ளன எனினும் கொசு உற்பத்தியை தடுப்பது தான் வரும்முன் காக்க சிறந்த வழி!
3.3 சிக்குன்குனியா
காய்ச்சல், மூட்டுவலி, தலைவலி, குமட்டல், தோலில் மாற்றங்கள் ஏற்படும்.
இவற்றை தடுக்கும் முறைகள் : நம் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சேகரித்து வைக்கும் தொட்டிகள் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். கொசுக்கள் வராமல் தடுக்க கொசுவர்த்தி சுருள் (பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்), கொசு வலைகள் பயன்படுத்தலாம். வீட்டை சுற்றி குப்பைகள் சேராமல் சுத்தம் செய்ய வேண்டும்.
Also Read:கொசுக்கள் தேடி வந்து உங்களையே கடித்தால் அதற்கு காரணம் இது தான்…
4. நீரால் பரவும் நோய்
மழைக்காலத்தில் நீர் பெருமளவில் அசுத்தமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சளி வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவை எளிதில் பரவ வாய்ப்புள்ளது.
5. கண்நோய்கள்
கண் சிவந்து வலிகள் ஏற்படும். இது வெயில் காலத்தில் மட்டுமல்ல மழை காலத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு மருந்துகள் என்று பொதுவாக இல்லை. கண்கள், முகம் மற்றும் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருந்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
6. தோல் நோய்கள்
மழைக்காலங்களில் எளிதில் வரும் மற்றொரு நோய் தோல் நோய்கள் தான். இதை தடுக்க, தினமும் சுத்தமான துணிகளை அணிய வேண்டும். மழைக்காலங்களில் துணிகள் காய்வது கடினம் அப்படி ஈரமாக இருக்கும் ஆடைகளை அணிவதும், அதை போட்டு படுத்து உறங்குவதையும் தவிர்க்கவும்.
வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், முகம், கை, கால், பாதம் மற்றும் கால் விரல் இடுக்குகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். சருமம் வறண்டு போகாமல் இருக்க தேங்காய் எண்ணெய் அடிக்கடி போட்டுக் கொள்ள வேண்டும்.

7. அரிப்புண்
மழை நீரில் காலை அதிகம் நேரம் வைத்திருந்தால், அரிப்புடன் புண்கள் ஏற்படும். அதேபோல் வாத நோய்கள் உள்ளவர்களுக்கு மூட்டு மற்றும் கால் வலி ஏற்படும். அவர்களால் வீடுகளில் கால்களை தரையில் வைப்பது சிரமமாக இருக்கும். எனவே, வீட்டினுள் தனியாக காலணிகளை அணிந்து கொள்ளலாம்.
இவ்வாறு மழைக்காலங்களில், உங்களை நீங்களே தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
இதை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்வதன் மூலம் அவர்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தலாம்.