வாழ்வில் அங்கதம் அடிக்கடி ஒருவனுக்கு கிடைத்துவிட்டால் வேறெந்த மருந்தும் அவனுக்குத் தேவையில்லை. அப்படியான வாய்ப்பை கோடானுகொடி தமிழர்களுக்கு வழங்கிய கிரேசி மோகன் இன்று இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் மிகச்சில வசனகர்த்தாக்கள் மட்டுமே திரைக்கதையின் போக்கிலேயே நகைச்சுவையை வைக்க முயன்று அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள். அவர்களில் எப்போதும் முதன்மையானவர் கிரேசி மோகன் மட்டுமே.

கமல்ஹாசனின் மூலமாக திரைத்துறைக்குள் வந்த கிரேஸி மோகனின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. ஆயிரக்கணக்கில் நாடங்கள் நடித்த அனுபவுமும் அதை இயக்கிய திறமையும் சினிமாவில் கைகொடுத்தன. குறிப்பாக அவருடைய வசனங்களுக்கு என தனியிடம் உண்டு. “பெரு மதன் சுருக்கமா மதனேஸ்வரன்னு கூப்டுவாங்க போன்ற முன் – பின் காமெடிகள் என்றும் பிரபல்யமானவை. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் அத்தனை பிரேம்களிலும் நகைச்சுவையை நாசூக்காக நுழைத்திருப்பார். அதனால் தான் முழுநீள காமெடி படம் என்றால் இன்றளவும் வசூல் ராஜா, பஞ்ச தந்திரம், காதலா காதலா, மைக்கல் மதன காமராஜன், பம்மல் கே சம்மந்தம் போன்ற படங்கள் மட்டுமே பலருக்கும் நினைவிற்கு வருகிறது.
கிரேஸியை பொறுத்தவரை ஜானகி செண்டிமெண்ட் மிகவும் முக்கியம். பெரும்பாலான அவரது படங்கள் மற்றும் நாடகங்களில் கதாநாயகியின் பெயர் ஜானகியாகத்தான் இருக்கும். பள்ளிப் பருவத்தில் அவரது ஆதர்ச ஆசிரியராக இருந்தவர் ஜானகி என்பவராவார். அதற்கு பிறகே நாடகத்துறையில் அவருக்கு ஈடுபாடு அதிகரித்துள்ளது. தனது கலைக்கான விதையை விதைத்த அந்த ஆசிரியரை தனது வாழ்நாள் முழுவதும் பல மேடைகளில் பெருமைப்படுத்தியிருக்கிறார் கிரேஸி மோகன்.
தமிழக திரைப்படத்துறையில் பொய்க்கால் குதிரை என்னும் படத்தின்மூலம் அறிமுகமான கிரேஸியின் தனித்துவமான வசனங்கள் வெகுஜன மக்களிடையே மிகவும் இலகுவாக புழங்கியது. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த மனிதர்களின் நிகழ்வுகளின் வெளிப்பாடை நகைச்சுவை உணர்வுடன் தருவதே அவரின் சிறப்பு. வசூல் ராஜா படத்தில் மார்க்க பந்து என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கிரேஸி. இந்த பெயருக்காக மூன்று நாட்கள் காத்திருந்தாராம்.

கதை விவாதம் முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது கீழே கிடந்த தினசரி ஒன்றில் மார்க்க பந்து என்பவரின் மரண செய்தி வந்திருக்கிறது. உடனே இயக்குனர் சரணுக்கு தொலைபேசி மூலம் கதாபாத்திரத்தின் பெயர் மார்க்க பந்து என தெரியப்படுத்தியிருக்கிறார். இப்படி வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தினையும் மகிழ்ச்சியின் அடிப்படையிலேயே பார்த்தவர். கலைத்துறை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே கிரேஸி மோகனின் மரணம் பேரிழப்பாகும்.
ஆயிரக்கணக்கில் நாடகங்கள் மற்றும் படங்கள் மூலம் பலரது சமகால கவலைகளை மறக்கச் செய்த கிரேஸி முதன் முறையாக தனது ரசிகர்களை அழச் செய்திருக்கிறார்.