விண்கல் பூமிக்கு வருவதெல்லாம் மிகச்சாதாரண நிகழ்வு. தினமும் நூற்றுக்கணக்கான கற்கள் இப்படி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து தங்களது அற்ப ஆயுளை உராய்வு விசை காரணமாக அழித்துக்கொள்கின்றன. ஆனால் இதில் சிக்கலே விண்கல்லின் அளவு தான். சிறியவை என்றால் அதை கடலும், காற்றும் பார்த்துக்கொள்ளும். இதுவே பெரியதென்றால் முடிந்தது கதை. இப்படியான விண்கல் ஒன்று வரும் வியாழக்கிழமை பூமியைக் கடக்க இருக்கிறது. மூன்று கால்பந்து மைதானம் அளவிற்கு அகலமுள்ள இந்த விண்கல்லால் ஆபத்து இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் ஆறுதல் அளித்திருக்கிறார்கள். ஆனால் பூமியைக் கடக்கும் மிகப்பெரிய விண்கற்களில் இதுவும் ஒன்று என்பதால் இதன்மீது வானியல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

2008 KV2
நீங்கள் நினைப்பது சரிதான். 2008 ஆம் ஆண்டு இந்த விண்கல்லானது கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு 2008 KV2 என்று பெயரிடப்பட்டது. 1900 மற்றும் 2199 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் இந்த விண்கல் பூமிக்கு நிருக்கமான தூரத்தில் கடக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நாசாவின் விண்ணூர்தி தயாரிக்கும் ஆய்வுக்கூடமான JPL (Jet Propulsion Laboratory) தான் இந்த விண்கல்லை கூர்ந்து கவனித்து வருகிறது. பூமியிலிருந்து 4.2 தமில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இந்த விண்கல் வர இருக்கிறது. நிலவு – பூமி இடையேயான தூரத்தை ஒப்பிடும்போது இது 17 மடங்கு தூரமாகும். பின்னர் ஏன் இதன்மேல் இத்தனை சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்? காரணம் இருக்கிறது.
NEO
பூமியிலிருந்து 30 மில்லியன் மைல்கல் சுற்றளவிற்குள் நுழையும் பெரிய அளவிலான அத்தனை விண்கல்லையும் ஆராய்ந்து வருகிறது JPL. இப்படி பூமிக்கு அணுகில் வரும் வான்பொருட்களுக்கு near-Earth objects என்று பெயர். ஏனென்றால் எதிர்காலத்தில் பூமியை நெருங்குவதற்கு சாத்தியமுள்ள விண்கல் எது? என்பது குறித்த ஆராய்ச்சியும் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் வியாழனன்று மணிக்கு 25,400 மைல் வேகத்தில் பூமியைக்கடக்கும் இந்த விண்கல் 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் பூமிக்கு அருகில் வரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆபத்தான விண்கல்
JPL கூற்றுப்படி இந்த 2008 KV2 அளவில் பெரியதாக இருப்பதால் இவை ஆபத்தான விண்கல் வரிசையில் வகைப்படுத்தப்படுகின்றன. 0.05 ஆஸ்ட்ரானாமிகல் யூனிட் (astronomical units) தூரத்தில் இந்த விண்கல் பூமியைக் கடந்தாலும் அதன் உருவம் பிரம்மாண்டமாக இருப்பதால் இப்பெயரினைப் பெற்றிருக்கிறது 2008 KV2 .
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரமே ஒரு ஆஸ்ட்ரானாமிகல் யூனிட் ஆகும்.