டிஏவி (DAV) குழுமம் இந்தியாவின் முப்படைகளில் சேர்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றலாம் என அந்த நிறுவனத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் வசந்தா பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,” இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடவும் தமிழகத்தில் இருந்து ராணுவத்திற்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றார்.

விழிப்புணர்வு
இன்றும் பல மாணவர்களுக்கு ராணுவத்தில் உள்ள துறைகளைப் பற்றியோ பலதரப்பட்ட வேலைகளைப் பற்றியோ தெரிவதில்லை. இதனாலேயே விழிப்புணர்வு வகுப்புகளை அந்நிறுவனம் நடத்தி வருகிறது. CDS (Combined Defense Service) எனப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான பயிற்சி அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது. 2019 பிப்ரவரி 2-ம் தேதி வரை மொத்தம் 36 அமர்வுகள் பயிற்சி அளிக்கப்படும். ஒரு அமர்வில் இரண்டரை மணி நேரம் வகுப்பு எடுக்கப்படுகிறது. இவை தவிர்த்து தேர்வுகளும் நடத்தப்பட்டு விடைகள் குறித்த விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறை சார்ந்த படிப்புக்கு ரூ.7,000 கட்டணம். பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருப்பவர்களுக்கு இலவசமாகவோ, ஸ்பான்சர்ஷிப் மூலமாகவோ பயிற்சிகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளில் சேர்வதற்கான தகுதிகள்
- 18 முதல் 24 வயது வரை அனைத்துப் பட்டதாரிகளும், பள்ளிப் படிப்பை முடித்தவர்களும் சேரலாம்.
- * ஆண், பெண் என இருபாலருக்கும் இதில் சம வாய்ப்பு உண்டு. ஆனால் திருமணம் ஆகாதவராக இருத்தல் அவசியம்.
- * ராணுவப்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- * கப்பற்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர பொறியியல் முடித்திருக்க வேண்டும்.
- * விமானப்படைக்கான பயிற்சியில் சேர பொறியியல் முடித்திருக்க வேண்டும் அல்லது பள்ளிப் படிப்பில் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும்.
- * அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் மணமாகாத/ கணவனை இழந்த பெண்களுக்கு வாய்ப்பு உண்டு. இவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
