இயற்கையை வியத்தல் கிட்டத்தட்ட எல்லா உயிரங்களுக்குமே நிகழக்கூடிய ஒன்று. அதையே படிக்க வாய்ப்பு கிடைத்தால்? அதுவே வேலையாகவும் இருந்தால்? உண்மை தான். அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பினை சென்னையில் உள்ள பாம்பு பண்ணை வழங்குகிறது. கிண்டியில் உள்ள இந்தப் பூங்காவில் இயற்கை சார்ந்த வாழ்வுமுறை குறித்தும், இயற்கையைப் பாதுகாப்பதில் நமக்குள்ள பொறுப்புகளைப் பற்றியும் கற்பிக்கிறது தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகம். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு என இருவகையான பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திறந்தவெளிப் பல்கலைகழகம்
காடுசார் கல்வி, இயற்கையோடு இணைந்த வாழ்வுமுறை, காட்டுக்குள் சுற்றுலா போன்றவை கற்பிக்கப்படும் இந்தக் கல்விக்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைகழகத்தினால் PSC (Program Study Centre) மூலமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூங்காவிற்கு உள்ளேயே கள ஆய்வு மற்றும் விலங்குகளைப் பற்றிய வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் தாவரங்கள் மற்றும் அவற்றின் வளர்ப்பு முறைகள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.
பிரிவுகள்
வன சுற்றுலா குறித்த பட்டயப்படிப்பு (Diploma In Wildlife Tourism) மற்றும் சுற்றுலா வழிகாட்டியினருக்கான சான்றிதழ் படிப்பு (Certificate Course On Wildlife Tourism Guide) ஆகியவை தற்போது கற்பிக்கப்பட்டு வருகின்றன. பட்டயப்படிப்பிற்கு ஒரு வருடமும் சான்றிதழ் படிப்பிற்கு ஆறுமாதமும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடங்கள்
- சுற்றுலா பற்றிய அறிமுகம்
- காடுசார் சுற்றுலா வகைகள்
- இந்தியாவின் பல்லுயிர்ப் பாதுகாப்பு
- சுற்றுலா மற்றும் தொழில்
- சுற்றுலா திட்டமிடல்
- வன உயிரினங்கள் மற்றும் அதன் வகைகள்

கல்வித் தகுதி மற்றும் கட்டணம்
பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கட்டணம் ரூ.8050. சான்றிதழ் படிப்பிற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். இதற்கான கட்டணம் ரூ.3050.
சிறப்பம்சங்கள்
இந்திய அரசின் பல்கலைகழக மானியக் குழுவினால் (UGC) இந்தக் கல்வி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வருடம் முழுவதும் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலும் தேர்வுகள் நடைபெறும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.
மேலும் தகவல்களுக்கு அணுகவும் cspt.edu@gmail.com (or) 9443568445