உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், தூய்மையான குடிநீர் வசதி என்பது அனைத்து பகுதி மக்களுக்கும் இன்னும் கிடைக்கவில்லை.
பாதுகாப்பான, தூய குடிநீர் அற்ற உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியாவுக்கு தான் முதலிடம்.
பாதுகாப்பான, தூய குடிநீர் அற்ற உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியாவுக்கு தான் முதலிடம். உலக தண்ணீர் தினமான கடந்த 22 ம் தேதி வெளியான WaterAid அறிக்கையானது, இந்தியர்கள் 163.1 மில்லியன் மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாமல் வாழ்வதாக கூறுகிறது. மேலும், பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் அனைவருக்கும் தூய்மையான தண்ணீர் தருவது பெரும் சவாலாக உள்ளதாக கூறுகிறது. இதன் காரணமாக, புட்டிகளில் (Bottle) அடைக்கப்பட்ட தண்ணீர் விற்பனை ஆச்சரியப்படும் விதமாக அதிகரித்து வருகிறது.
புட்டிகளில் தண்ணீர்
2016 மற்றும் 2017 ஆண்டுகளில் புட்டி தண்ணீர் குடிப்பது 19 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றும், வேறு எந்த உலக சந்தையிலும் இல்லாத அளவிற்கு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் மார்ச் 22 ஆம் தேதியிட்ட ஒரு குறிப்பில் Mintel ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம், அதிகரித்து வரும் வருமானம், நுகர்வோர் வசதி, நுகர்வோரிடம் ஏற்படும் விழிப்புணர்வு, பொருட்களை குறிப்பாக வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் வசதி ஆகியவை என்றும் Mintel மூலமாக அறியப்படுகிறது.
இந்திய நாட்டில் 2012 மற்றும் 2017 க்கு இடைப்பட்ட காலத்தில், பாட்டில் தண்ணீர் ரூ.9,010 கோடி அளவிற்கு (1.38 பில்லியன் டாலர்) விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது 184% அதிகமாகும். இதே காலகட்டத்தில், குளிர்பான விற்பனை 56 சதவீதம் அதிகரித்து, ரூ.9,100 கோடி ரூபாய் (1.4 பில்லியன் டாலர்) அளவிலிருந்து ரூ.14,200 கோடியாக (2.1 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், பாட்டில் தண்ணீர் விற்பனை 2012 ஆம் ஆண்டில் 5.3 பில்லியன் லிட்டராக இருந்தது. இது 2017 -ல் 13.3 பில்லியன் லிட்டர்களாக அதிகரித்ததாகவும் (150.7% அதிகம்), Euromonitor மதிப்பீடு தெரிவிக்கிறது.
இவ்வளவு தண்ணீரை யார் வாங்குகிறார்கள்?
இந்த பாட்டில் தண்ணீர் வாங்குவது யார்? Mintel ஆராய்ச்சியின் கூற்றுப்படி, பெரும்பாலும் அதிக ஊதியம் பெறும் வருமானம் கொண்ட நகர்ப்புற இந்திய நுகர்வோர் சுகாதாரமான மற்றும் தரமான குடிக்கத்தக்க தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தரவுகள் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டியுள்ளன. சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை உள்ள இந்தியாவில் வசிக்கும் நுகர்வோர், கோலா மற்றும் வீட்டில் தயார் செய்த குளிர் பானங்கள் போன்றவற்றை அதிக அளவில் குடித்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளில், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் மக்கள் மிகவும் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர். இதன் விளைவாக பாட்டிலில் அடைக்கப்பட்ட பாரம்பரிய குளிர்பானங்கள், மற்றும் புட்டி தண்ணீர் போன்றவற்றின் விற்பனை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய அரசும், மக்களின் உடல்நலத்தை மேற்கோள் காட்டி சமீபத்தில் சர்க்கரை கலந்த கோலா பானங்கள் மீதான வரிகளை அதிகரித்தது.
இதற்கிடையில், இந்தியாவில் காணப்படும் பிராண்டுகள் உட்பட உலகளவில் விற்பனை செய்யப்பட்ட பாட்டில் நீரில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன என்று நியூயார்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் நாம் தாகத்தைத் தணிக்க வேண்டி இவ்வகை தண்ணீரை இன்னும் அதிகமாக விரும்புபவர்களாவே இருக்கிறோம். Euromonitor படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் அளவு 20% க்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அரசியல் காரணங்களாலும், அரசின் பொறுப்பற்ற செயலாலும் மக்களுக்கு எங்கனம் கிடைக்கும் நல்ல தண்ணீர்?

மக்களுக்கு நெகிழி பற்றிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. பின் இவ்வளவு நெகிழி புட்டிகளும் எங்கே செல்லும்? வேறெங்கே… நீர் நிலைகளுக்குத்தான்.