42 வது சென்னை புத்தக கண்காட்சி இன்று (04/01/2019) நந்தனம் YMCA மைதானத்தில் துவங்குகிறது. 17 நாட்கள் நடைபெறும் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வு வரும் ஜனவரி 20 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் புத்தகத்திற்கு என்று ஒரு நிரந்தரப் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI – Booksellers and Publishers Association of South India) ஆகியவை இணைந்து நடத்தும் இந்த புத்தகத் திருவிழா இதுவரை சென்னையில் 41 ஆண்டுகளும், மதுரையில் 12 ஆண்டுகளும், கோவையில் 4 ஆண்டுகளும் நடைபெற்றிருக்கின்றன.

தமிழகத்திலேயே மிகப் பெரிய இந்தப் புத்தக் கண்காட்சியை ஒட்டியே எழுத்தாளர்கள் பலரும் தங்களது புதுநூல்களை வெளியிடுகிறார்கள். 820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்கள், பல லட்சம் வாசகர்கள் எனக் களைக்கட்டப்போகும் புத்தகக்காட்சியை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைக்க உள்ளார்.
எத்தனை அரங்குகள்?
தமிழுக்கு 487, ஆங்கிலத்துக்கு 294, மல்டி மீடியாவுக்கு 13, பொது அரங்குக்கு 26 என, மொத்தம் 820 அரங்குகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. இலக்கியம், இசை, உடல், உணவு, சினிமா என 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுமார் 1.5 கோடி புத்தகங்கள் இந்தக் காட்சியில் இடம்பெற உள்ளன. முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் தங்கர்பச்சான், ஆட்சியர் வெ.இறையன்பு, எழுத்தாளர் நாஞ்சில்நாடன் உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இவைபோக மாணவர்களுக்கு ஓவியபோட்டி, கட்டுரைப்போட்டி, புதிய குறும்படங்கள் திரையிட தனி அரங்குகள் எனப்பல அம்சங்களை உள்ளடைக்கியிருக்கிறது இந்த புத்தகக் கண்காட்சி. மேலும் தினந்தோறும் பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுத்தாளர்கள், முக்கிய ஆளுமைகள் உரை நிகழ்த்த உள்ளனர். பொங்கலன்று நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முதன் முறையாக சிறந்த பெண் எழுத்தாளர், பெண் படைப்பாளி, பெண் பதிப்பகத்தார் என தனித்தனியாக விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
இதுகுறித்துப் பேசிய பபாசியின் தலைவர் வயிரவன்,”முதல்முறையாக ஆன்லைன் டிக்கெட் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நூல்கள், நூல்கள் குறித்த குறிப்புகள், அரங்கு எண் ஆகியவை அறிந்துகொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாசகர்களுக்கென இலவச வைஃபை வசதி, சார்ஜர் வசதி, உணவகம், குடிநீர், ஏடிஎம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
20 லட்சம் வாசகர்கள்
இந்தியா முழுவதும் இருக்கும் தமிழர்கள் ஜனவரி முதல்வாரத்தில் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள சென்னை வருகிறார்கள். சென்ற ஆண்டு கண்காட்சிக்கு வந்த மொத்த மக்களின் எண்ணிக்கை 12 லட்சம் ஆகும். இம்முறை அரங்கை விரிவுபடுத்தியிருப்பதால் இங்கு வருவோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைகள்
ஆரோக்கியமான அறிவு சார் சமூகத்தை உருவாக்குவதில் குழந்தைகள் தான் மிக முக்கிய பங்காற்றுகின்றன. எதிர்காலத்தை அடுத்த நிலைமைக்கு இட்டுச்செல்ல சரியான கல்வி அவசியம். இன்றைய பள்ளிகள் தரமான கல்வியை குழந்தைகளுக்கு வழங்குவதில்லை. எனவே பெற்றோர்களின் பங்களிப்பு அவசியமாகிறது. அவர்களை இம்மாதிரியான கண்காட்சிகளுக்கு அழைத்துச் சென்று புத்தகங்களுடனான அறிமுகத்தை ஏற்படுத்துவது சமூக மாற்றத்திற்கான விதையாக இருக்கும். எனவே முடிந்த அளவு புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளை கூட்டிச்செல்லுங்கள். அவர்களுடைய ஆசைக்கேற்ப புத்தகங்களை தேர்வு செய்ய அனுமதியுங்கள். ஏனெனில் அவர்களுடைய எதிர்காலம் அங்கே தான் பிரகாசமடைய வாய்ப்புள்ளது.
நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி