இந்தியாவில் சாலை விதிகளை மதிப்போரின் எண்ணிக்கை சொற்பம். காலமின்மை, உடல் நிலை என ஆயிரம் காரணம் கூறினாலும், இவை தடுக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நம் நாட்டில் வருடந்தோறும் 1.48 லட்சம் பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கிறார்கள் எனப் போக்குவரத்துறையின் அறிக்கை கூறுகிறது.
இப்படி விதியை மதிக்காதவர்களுக்கு அபாரதத் தொகையும் சில நேரங்களில் சிறைத் தண்டனையும் காவல்துறையால் கொடுக்கப்படுகிறது. ஆனாலும், எந்த விதிமீறலுக்கு எவ்வளவு அபராதம் என்பது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இன்னும் வந்தபாடில்லை. இதனால் சில காவல் துறையினரே சட்டத்திற்குப் புறம்பாக வசூல் செய்வதாகக் குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது.

இதனைத் தடுக்கும் விதத்தில் புனே போலீசார் புது அபராதப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். 42 விதிமீறலைகளைப் பற்றியும் அதற்கான அதிகபட்ச அபாரதத் தொகையையும் விவரித்துள்ளது அந்த அறிக்கை.
விதிமீறல்களும் அபாரதங்களும்
- தலைக் கவசம் அணியாத (Without Helmet) இரு சக்கர வாகன ஓட்டிகள், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் (Without License) 500 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். ஓட்டுநர் உரிமத்தை எடுத்து வராத (Not Carrying License) வாகன ஓட்டிகளுக்கான அபராதம் 200 ரூபாய். ஆனால் ஒரிஜினல் லைசென்ஸை எப்போதும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. (டிஜிட்டல் லைசென்ஸை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.)

அலைபேசிக்கு 200 அபராதம்!!
- விதிமுறைகளுக்கு உட்படாத நம்பர் பிளேட் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கான அபராதத் தொகை 1,000 ரூபாய். அதற்குரிய வடிவத்தில் எண்களை எழுதாமலிருத்தல், தெளிவாக எண்களைக் குறிப்பிடாமல் இருத்தல் போன்றவை விதிமீறல்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாகனம் ஓட்டும் பொது அலைபேசியில் பேசுவோருக்கும், தடை செய்யப்பட்ட இடங்களில் அதிக ஒலியெழுப்பும் வாகன ஓட்டிகளுக்கும் 200 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.

- அதே போல் சீட் பெல்ட் அணியாததற்கான அபராதத் தொகை 200 ரூபாய். வண்டியை நிறுத்தத் தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தினால் 200 ரூபாய் அபராதம் கட்ட நேரிடும்.
- தலைக்கவசம் அணியாத (Without Helmet) இரு சக்கர வாகன ஓட்டிகள், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனங்களின் பின்னிருக்கையில் உள்ளவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Credit: Automotive india
அதிவேகம் அபாரதத்தில் முடியும்!!
- மக்கள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் சாலைகளில் முறைகேடாக வாகனப் பந்தயங்களில் (Racing) ஈடுபடுவோருக்கு 2000 ருபாய் அபராதமாக விதிக்கப்படும்.
- எந்தெந்த இடங்களில் எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும் என்ற வரைமுறை ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் ருபாய் 1000 ஆகும்.
- பக்கவாட்டுக் கண்ணாடிகள் (Side Mirror) இல்லாத வாகனங்களுக்கு 200 ரூபாய் அபராதமும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இப்படி 42 வகையான குற்றங்களுக்கும் விதிக்கப்படும் அபாரத் தொகைகளையும் இப்பட்டியல் விளக்குகிறது.

விதிகளை மீறும் எண்ணமிருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புங்கள். பணத்தை வீண் விரயம் செய்ய விரும்பாதவர்கள் இன்றிலிருந்தே விதிகளை கடைபிடிக்கத் துவங்குங்கள். இந்த விதிகள் நமது பாதுகாப்பிற்காகத்தான் விதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வோம். வளமோடும் பணமோடும் வாழ்வோம்.