- ஜாவா பைக்குகள் மூன்று மாடல்களில் வெளியாகின்றன.
- ஜாவா பெரக் மாடல் 2019 – ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும்.
- ஜாவா பைக் விற்பனைக்கு இந்தியா முழுவதும் 107 முகமைகள் அமைக்கப்பட உள்ளன.
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) மற்றும் க்ரூஸர் பைக்குகளுக்கு (Cruiser Bikes) நேரடிப் போட்டியான ஜாவா மோட்டார் சைக்கிள்கள் (Jawa Motorcycles), 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று மாடல்கள்
மோட்டார் சைக்கிள் பிரியர்களால் எப்போதும் மறக்க முடியாத ஒரு பைக் தான் ஜாவா. பிரபல ஜாவா மோட்டர் சைக்கிள்கள், 1960 – களில் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. ராயல் என்ஃபீல்டு, க்ரூஸர் பைக்குகளுக்கு நேரடிப் போட்டியாக வெளியான ஜாவா பைக் விற்பனை, 1996 – ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜாவா மோட்டர் சைக்கிளின் புதிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜாவா (Jawa), ஜாவா 42 (Jawa 42), ஜாவா பெரக் (Jawa Perak) என்ற பெயரில் மூன்று புதிய மாடல்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.
விலை மற்றும் சிறப்பம்சங்கள்
இவற்றில் ஜாவாவின் விலை ரூபாய் 1.55 லட்சம் என்றும், ஜாவா 42 – இன் விலை ரூபாய் 1.66 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 3 – வது லிமிட்டட் எடிஷன் மாடலான பெரக் ரூ.1.89 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், இது வெளியாக இன்னும் சில காலம் ஆகுமாம்.
300 சிசி எஞ்சின் கொண்ட ஜாவா, 350 சிசி எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டுக்கு நேரடிப் போட்டியாக அமையும். புதிய ஜாவா பைக்குகள், 293 சிசி திறன் இன்ஜினுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 27 பிஎச்பி திறனுடன், பியூயல் இன்ஜக்ஷன் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. 6 கியர்கள் கொண்டதாகவும் உள்ளது.

1960 – களில் இந்தியாவில் ஜாவா பைக்குகளை விற்பனை செய்து வந்த ஐடியல் ஜாவா நிறுவனம், தற்போது மகேந்திரா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ‘கிளாசிக் லெஜெண்ட்ஸ்’ என்ற நிறுவனத்தின் பேரில் ஜாவா பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதனால் பைக் ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜாவா பைக் விற்பனைக்காக புதிய டீலர்களையும், விற்பனையாளர்களையும் நியமிக்க உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் முதல் முழு அளவில் விற்பனை தொடங்கும் என தெரிகிறது. அதுபோலவே நேற்று முதல் முன்பதிவும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.