தென்கொரியாவின் வாகன உற்பத்தி தாதாவான ஹூண்டாய், கார் வடிவமைப்பின் புது அத்தியாயத்தை துவங்கியிருக்கிறது. நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்காக பிரத்யேக காரினை தயாரித்திருக்கிறது ஹூண்டாய். முதற்கட்டமாக எலிவேட் (Elevate) காரின் கான்செப்ட் மாடல் சமீபத்தில் CONSUMER ELECTRONICS SHOW வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனம் பலரது கவனத்தை ஈர்த்தது. ரோபோட்டிக் கால்களுடன் இணைக்கப்பட்ட இந்தக் கார், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. இதற்காக அந்நிறுவனம் மூன்றாண்டு கால உழைப்பை வழங்கியிருக்கிறது.

எலெக்ட்ரிக் மீட்பன்
ஹூண்டாயின் இந்த அல்டிமேட் மொபிலிட்டி வெஹிகிள் (Ultimate Mobility Vehicle) முழுவதும் எலெக்ட்ரிக் பவர் மூலம் இயங்கவல்லது. இடிபாடுகளுக்கு மத்தியில், மனிதர்களால் செல்ல முடியாத இடங்களுக்கு கூட இந்த காரால் செல்ல முடியும். வாகனம் இயங்கமுடியாத அளவிற்கு சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பின், நான்கு ரோபோட்டிக் கால்களின் மூலம் கார் நடந்து செல்லும். உண்மைதான். எக்ஸ்டெண்டட் ஆர்ம்களின் நுனியில் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரம் சாதாரண கார் போலவும் இது இயங்கும்.
வடிவமைப்பு
இந்த பிரத்யேக காரின் வடிவமைப்பின் போது பாலூட்டிகள் மற்றும் ஊர்வன விலங்குகளின் உடல்மொழியைப் பின்பற்றியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் கால்களின் உதவியால் சுமார் ஐந்து அடி உயரமான சுவரில் கூட இந்தக்காரால் ஏற முடியும். இடர்பாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மனிதர்களை லாவகமாக் வெளியே கொண்டுவதற்குத் தகுந்தபடி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுள் வீல்செரும் இடம்பெற்றிருக்கிறது. ரோபோட்டிக் ஆர்ம்களின் உதவியுடன் இந்த சேர் சிக்கலான சூழ்நிலையில் இருக்கும் மனிதர்களிடம் கொண்டுசேர்க்கப்படும்.

வாகனத் தயாரிப்பு வரலாற்றில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை புகுத்துவதன்மூலம் பல ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். மீட்புப்பணிகளின் போது ஏற்படும் ஒரு வினாடி தாமதமும், பல உயிர்களை விலையாகத் தரவேண்டும் என்பதால் இம்மாதிரியான வாகனங்களின் தேவையை ஒவ்வொரு அரசும் உணரவேண்டும். இதுகுறித்துப் பேசிய ஆட்டோ பசிபிக் நிறுவனத்தின் சந்தை ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் டேனியல் ஹால் (Daniel Hall), “ஹூண்டாயின் இந்தக்கார் சுவாராஸ்யமான அம்சங்களைக் கொண்டுள்ளது. ராணுவத்தில் வெடிகுண்டுகளை அப்புறப்படுத்துவதற்காக ரோபோக்களைப் பயன்படுத்துவதைப்போல் எதிர்காலத்தில் இந்த நடக்கும் காரும் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்” என்றார்.