அம்ரிஷ் பூரி. இவருக்கு முன்னுரை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் மிகச்சிறந்த வில்லன் கதாப்பாத்திரங்கள் என ஒரு பட்டியலிட்டால் நிச்சயம் பூரி அதில் முதலிடத்தில் இருப்பார். ஹாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி கட்டிய இந்தியாவின் மிகச்சிறந்த நடிகரான அம்ரிஷ் பூரியின் 87 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை நினைவுகூரும் விதமாக கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அம்ரீஷ் பூரி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்இருந்த இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தரில் ஒரு பஞ்சாபி பேசும் குடும்பத்தில் லாலா நிகல் சந்த் பூரி மற்றும் வேத் கௌர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தனது 39 வது வயதில் திரைத்துறைக்குள் நுழைந்தார். புகழ்பெற்ற நாடக கலைஞர்களான கிரிஷ் கர்னாட் மற்றும் சத்யதேவ் துபேய் ஆகிய ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் பூரி. இவரது சகோதரர்களான சமன் பூரி மற்றும் மதன் பூரி ஏற்கனவே திரைத்துறையில் இருந்தனர். இதன்மூலம் 1954 ஆம் ஆண்டு முக்கிய கதாப்பத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டார்.

தன்னுடைய இளமைக்காலத்தில் நாடகங்கள் மற்றும் தியேட்டர்களில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்திருக்கிறார் பூரி. 1971 ஆம் ஆண்டு தனது முதல் படமான ரேஷ்மா அவுர் ஷேரா (Reshma Aur Shera) என்னும் படத்தில் நடித்தார். அதன்பிறகு பாலிவுட் படங்களில் பூரியின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. அதற்கு பத்தாண்டுகள் கழித்து ரிச்சர்ட் அட்டன்பேரோ இயக்கிய காந்தி என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடத்து உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டார். அதிலும் குறிப்பாக ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இண்டியானா ஜோன்ஸ் அண்ட் டெம்பிள் ஆஃப் டூம் படத்தில் மோலா ராம் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த பூரிக்கு மேற்கத்திய ரசிகர்களின் ஆதரவு பெருகியது. துவக்கத்தில் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் டெம்பிள் ஆஃப் டூம் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த பூரியை இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மிகவும் கஷ்டப்பட்டு சம்மதிக்கவைத்தார்.

ஹிந்தி,தமிழ்,கன்னடம்,ஆங்கிலம், தெலுங்கு என 12 க்கும் மேற்பட்ட மொழிகளில் 200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள பூரி இன்றளவும் வில்லன் கதாப்பாத்திரத்தின் இலக்கணமாக அறியப்படுகிறார்.தன்னுடைய 55 வது வயதில் மிஸ்டர் இந்தியா திரைப்படத்தில் மொகாம்போவாக நடித்திருந்த பூரியை அத்தனை எளிதில் யாராலும் மறக்கமுடியாது. அதேபோல தாஸ் ராஜ் (Tash Raj) இயக்கத்தில் வெளிவந்த தில்வாலே துல்ஹனியா லீ ஜாயங்கே (Dilwale Dulhania Le jaenge) படத்தில் பல்தேவ் சிங் என்னும் ரோலில் நடித்திருந்தார் பூரி. அவருடைய நடிப்புத் திறமைக்கு இன்றுவரை அப்படம் சான்றாக சொல்லப்படுகிறது. லண்டனில் வாழும் இந்தியராக பூரி அதில் நடித்திருந்தார். பாலிவுட் வட்டாரங்களில் அந்த நடிப்பிற்கு இணை இந்நேரம் வரையிலும் வரவே இல்லை. கடந்த டிசம்பர் 27, 2004 ஆம் ஆண்டு பூரி மரணமடைந்தார். ஆனாலும் தன்னுடைய நடிப்பால் இன்றுவரை நம்மோடு நம் கண்முன்னே மொகாம்போவாக, பல்தேவ் சிங்காக பூரி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.