நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான நீங்கள் தவறவே விடக் கூடாத சிறந்த 10 திரைப்படங்களின் பட்டியல்.
1. பராசக்தி
சிவாஜி கணேசனின் முதல் படம். அதுமட்டுமல்ல பகுத்தறிவு திராவிடம் பேசிய முதல் படமும் பராசக்தி தான். கோயிலையும், கோயிலில் நடக்கிற ஊழல்களையும், அர்ச்சகரின் அத்துமீறல்களையும், ஆன்மிகம் பேசுகிறவரின் எல்லைமீறல்களையும் பொளேர் பொளேர் என முகத்தில் அறைந்து சொல்லும் இந்தப் படத்திற்கு, பராசக்தி என்று பெயர் வைத்து, ஆன்மிகக் கூட்டத்தை உள்ளே இழுத்தது தான் முதல் வெற்றி.
ஆனால், இப்படியொரு வெற்றி வரும் என்று தயாரிப்புத் தரப்பில் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால், இந்தப் படம் என்னவோ செய்யப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்தார்கள். அதற்குக் காரணம்… குத்தீட்டி வசனங்கள். எழுதியவர் கலைஞர் கருணாநிதி.
2. மனோகரா
இது கலைஞரின் வசனத்திற்காகவே பார்க்க வேண்டிய திரைப்படம். அவரின் தீப்பொறி பறக்கும் வசனங்களுக்கு வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக, கம்பீரமாகக் குரல் கொடுத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. படத்தில் இடம்பெறும் தர்பார் வசனங்கள் மிகச் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சிவாஜியிடம் அவரது தாய் கண்ணாம்பா கூறுவார். இன்றளவும் புகழ்பெற்ற வசனமாக விளங்குகின்றது.
3. வீரபாண்டிய கட்டபொம்மன்
1959 – ஆம் ஆண்டு சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன். விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் படம் இது. படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த சிவாஜி தனது நடிப்பால் ரசிகர்களின் கண்முன்னே கட்டபொம்மனைக் கொண்டுவந்து நிறுத்தி இருப்பார்.
வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படம் வெளியாகும் வரை, நாடகமாக மட்டும் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடி முடிந்த பின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது.
4. தில்லானா மோகனாம்பாள்
நடிகர் திலகம் சிவாஜியும், நாட்டியப்பேரொளி பத்மினியும் போட்டி போட்டு நடித்த திரைப்படம் இது. சிவாஜியின் நடிப்புத் திறமையை வெளிக் கொணர்ந்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் இடம் பெற்ற “நலந்தானா” மற்றும் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம்” என்ன போன்ற பாடல்கள் இன்றளவும் தமிழின் எவர்கிரீன் பாடல்களில் ஒன்றாக விளங்குகின்றன. இந்தப் படத்தின் தாக்கத்தில் வெளி வந்தத் திரைப்படம் தான் ரகுமான்- விந்தியா நடிப்பில் வெளி வந்த சங்கமம் திரைப்படம்.
5. ராஜராஜசோழன்
தஞ்சைத் தமிழ் மண்ணில் பிறந்த நடிகர் சிவாஜி உலகையே ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வந்த மாமன்னர் ராஜராஜசோழனாக, ராஜராஜசோழன் படத்தில் நடித்திருப்பார். வழக்கம் போல தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டார் இந்தப் படத்தில். 1973 -ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற தூய வசனங்களும், பாடல்களும் பலரது பாராட்டைப் பெற்றவை.
6. கர்ணன்
தமிழ் சினிமாவில் வரலாற்று படங்களை குறிப்பாக தமிழகத்து சுதந்திர போராட்ட வீரர்களான, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த, பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய படம் ‘கர்ணன்’ திரைப்படம். இந்தப் படத்தில் கோபம், பெருமிதம், வெட்கம். கருணை, கம்பீரம், காதல், கண்ணீர் கலந்து நம் கண்முன் கர்ணனை நிறுத்திய சிவாஜியின் நடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று. கர்ணன் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் 2012 – ஆம் ஆண்டு வெளியானது. அப்போதும் அது மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத் தக்கது.
7. பாச மலர்
‘மலர்ந்தும் மலராத… பாதிமலர் போல..’ கேட்பவர்களுக்கு சிறகு முளைக்க வைக்கும் அதிசயப் பாடல். விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இந்தப் பாடலை தன்னால் முடிந்தவரை இசை கெடாமல், கண்னீரும் – குழந்தையின் சிரிப்புமாகப் படமாக்கியிருப்பார் இயக்குனர் பீம்சிங். சிவாஜிக்குப் பின்னால் இருக்கும் புத்தர் சிலை இந்தப் பாடல் தரும் மன நிறைவையும் சோகமான சூழலிலும் நம்மை ஆறுதல்படுத்துகிற உணர்வை கூடுதலாக்கும். சாவித்திரி – சிவாஜி இருவருக்கும் இடையில் மாறுகிற காட்சிகளில் இசையின் உன்னதம் கெடாத அழகு. இசைக்காகவும், சிவாஜி – சாவித்திரி நடிப்பிற்காகவும் நீங்கள் தவறவே விடக்கூடாத படம் பாசமலர்.
8. ராஜபார்ட் ரங்கதுரை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு இணையே இல்லை. நாடக நடிகராக அவர் நடித்திருக்கும் இப்படத்தில் உறவுகளால் ஏமாற்றப்படுவதுதான் கதை. இந்த படத்தின் கதையை அடிப்படையாக வைத்து பல தமிழ் படங்கள் வந்ததன. அதெல்லாம் இது போல இல்லை. அன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல இப்போதும் இந்தப் படம் கலங்க வைக்கும். அவர் தான் சிவாஜி.

9. கப்பலோட்டிய தமிழன்
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வ.ஊ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும். முன்பே கூறிய படி, பி.ஆர். பந்துலு தான் இப்படத்தின் இயக்குனர். இதில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பாரதியாரின் கவிதைகள் என்பது இத்திரைப்படத்தின் தனிச் சிறப்பு. சிவாஜி கணேசன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஆகச்சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
10. தெய்வ மகன்
சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த தெய்வமகன் திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய மற்றொரு சிறந்த படம். இதில் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பு அசாத்தியமானது. இந்தப் படத்தின் பாடல்களும், வசனங்களும் இன்னும் பிரபலம்.