இந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம். ஆந்திர பிரதேசத்தின் 75 ஆண்டுக்கும் மேலான கனவுத் திட்டம்! நிறைவேற இன்னும் சில மாதங்களே உள்ளன. ஒட்டுமொத்த ஆந்திர மக்களின் நீண்டகால கனவுத் திட்டமான “போலவரம் நீர்பாசனத்திட்டத்தின்“ கட்டுமான பணிகள் உச்சகட்ட வேகத்தில் நடைபெற்றுவருகிறது. அப்படி என்ன இருக்கிறது இந்தத் திட்டத்தில்? கீழே காணலாம்.

பொலாவரம் நீர்ப்பாசனத் திட்டம்
1941 ஆம் ஆண்டில் திவான் எல்.வெங்கட கிருஷ்ண ஐயர் அவர்களால் கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட , திட்டமொன்று முன்மொழியப்பட்டது. அதன் மூலம் 3,50,000 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் பெறவும், 40 மெகாவாட் நீர் மின்சாரமும் தயாரிக்க முடியும். ஆனால் அப்போதைய நிர்வாகமோ, நிதிநிலையோ இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருவதாய் இல்லை. சுதந்திரத்திற்குப் பிறகும்கூட மத்திய, மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பு இல்லாததால் இத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வந்தது. 1980 ல் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த டி.அஞ்சையா அவர்களால் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு போலவரத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் மீண்டும் முடங்கிய இத்திட்டம் YSR ரெட்டி அவர்களால் மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டது. வனத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனவிலங்கு பாதுகாப்புத் துறைகளிடம் அனுமதி பெறுவதற்கு மட்டுமே ஏறத்தாழ 4 ஆண்டுகளாகியது. ஒவ்வொரு முறை தடைபடும்போதும் திட்டச்செலவு கூடிக்கொண்டேச் சென்றது. இறுதியில் 2014 ல் தான் இத்திட்டத்திற்கு “National Project” அந்தஸ்து வழங்கப்பட்டது.
1941 ல் 6.5 கோடியாக இருந்த திட்டமதிப்பு 1946, 2004 ஆண்டுகள் முறையே 159 மற்றும் 8000 கோடியைத் தாண்டியது. திட்டத்தின் தற்போதைய மதிப்பு 58,319 கோடியாகும்.
பிரம்மாண்டத் திட்டம்
மகாராஷ்டிரா மாநிலம் திரிம்பாக் மாநிலத்தில் உற்பத்தியாகும் கோதாவரி ஆறானது 1465 கிமீ பயணித்து, ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரிக் கரையில் போலவரம் எனும் கிராமத்தில் 8493 ஏக்கர் பரப்பளவில் (632 ஏக்கர் வனப்பகுதி) இவ்வணை வர உள்ளது. அணையில் அதிகப்பட்சமாக 195 TMC தண்ணீரை சேமிக்கலாம்.
அதன்படி, 48 கதவுகள் கொண்ட 1158.90 மீ நீளமுள்ள SPILLWAYS (அணையிலிருந்து உபரி நீர் வெளியேற உதவும் மதகு) கட்டப்படுகிறது. ஒவ்வொரு கதவும் 20 மீ நீளம் 16 மீ அகலம் உடையது. ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு மலைமலையாக மண் தோண்டப்பட்டு இந்த அணை கட்டப்படுகிறது. இந்த spillway அமைப்பைத் தொடர்ந்து உறுதிவாய்ந்த கான்கிரீட் கலவையில் விரிப்பு அமைக்கப்படும்.

கோதாவரி தேசத்தின் பெரிய நதிகளில் ஒன்றாகும். இதில் வருடந்தோறும் 3000 tmc தண்ணீர் கட்டுப்பாடின்றி கடலுக்குள் பாய்கிறது. எனவே அணையின் அடியிலும் பக்கவாட்டிலும் நீர் ஊடுருவி செல்லாமல் இருக்க “ ECRFD – (earth cum Rock fill dam )” எனப்படும் Diaphragm சுவர் ஒன்று தரையிலிருந்து 130 முதல் 137 அடி ஆழம் வரை 1.5 மீ தடிமன் உள்ள வலுவான பென்டோனைட் (bentonite எரிமலைச் சாம்பல் ) மற்றும் கான்கிரீட் கலவையால் 1397 மீ நீளத்திற்கு Jet Grouting தொழிற்நுட்பத்தால் நிறுவப்படுகிறது. இதனைக் கட்டிமுடிக்கும் வரை தற்காலிகமாக மேல் பகுதியில் ஒரு Coffer dam மற்றும் கீழ் பகுதியில் ஒரு Coffer dam என இரண்டு Coffer dam அமைக்கப்பட்டுள்ளது. (Coffer dam கட்டுமான பணிகள் மேற்கொள்ள நதியின் குறுக்கே அமைக்கப்படும் தற்காலிகத் தடுப்பு அமைப்பு ). அணையானது 50 லட்சம் கன அடி தண்ணீரை தாங்கும் பலம் கொண்டது. இதுவரை கோதாவரியில் 30 லட்சம் கன அடி நீரே அதிகபட்சமாக பாய்ந்துள்ளது. (காவிரியில் 1 லட்சம் கன அடி நீருக்கே வெள்ளம் ஏற்பட்டு விடுகிறது!)
நதிநீர் இணைப்பு
அணையின் வலது கால்வாய் வழியாக புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி 80 TMC தண்ணீரானது 174 கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணா நதிக்கு திருப்பி விடப்படுகிறது. அவ்வாறு விடப்படும் நீர் பிரகாசம் தடுப்பணையருகே கிருஷ்ணாவுடன் இணைகிறது. இதற்கு சற்று தொலைவு முன்னரே கிருஷ்ணாவிலிந்து குறிப்பிட்ட அளவு நீரானது ஒரு கால்வாய் மூலம் பென்னாரு நதிக்கு அனுப்பப்படும். மேலும் அந்த உபரி நீரானது காவிரிக்கு திருப்பிவிடப்படும் (175 TMC). இதனால் தமிழகமும் வளம்பெறும்.

அணையின் இடது கால்வாய் வழியாக 40 TMC நீரானது 181.5 கிமீ நிலப்பரப்பை வளமாக்கி விசாகப்பட்டினம் வழியாக வங்காள விரிகுடா நோக்கி பயனிக்கிறது. இதில் 23.44 TMC நீரானது விசாகா. மக்களின் குடிநீர் தேவைக்கும் மற்றும் தொழிற்சாலைத் தேவைக்கும் பயன்படுகிறது. மேலும் சட்டீஸ்கர், ஒடிசா மாநிலங்கள் முறையே 1.5 மற்றும் 5 TMC நீரைப் பெறுகின்றன.
இதன்மூலம் 540 கிராமத்தைச் சேர்ந்த 28.5 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியடைவதோடு, 15.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும் வளம்படப்போகிறது. ஒட்டுமொத்த ஆந்திரா முழுவதையும் வறட்சியற்ற மாநிலமாக மாற்றும் திரு சந்திரபாபு நாயுடு வின் கனவு திட்டம் நிறைவேறப்போகிறது.